

நெல்லை,
நெல்லையப்பர் கோயிலில் நேற்று முன்தினம் விசேஷ சாந்தி, 2-ம் கால யாகசாலை பூஜை, சிறப்பு பூர்ணாகுதி, தீபாராதனை ஆகியவை நடந்தன. இரவு 7 மணிக்கு விசேஷ சாந்தி, 3-ம் கால யாகசாலை பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை ஆகியவை நடந்தன. யாக சாலை பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து இரவில் பிரதான மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடந்தது.
நேற்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு விசேஷ சாந்தி, 4-ம் கால யாகசாலை பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை நடைபெற்றது. மாலை 5 மணிக்கு விசேஷ சாந்தி, 5-ம் கால யாகசாலை பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனையும் நடந்தது.
இன்று(வெள்ளிக்கிழமை) அதிகாலை 3 மணிக்கு 5-ம் கால யாகசாலை பூஜை, நாடி சந்தானம், பரிவார மூர்த்திகளின் யாகசாலை, மகா பூர்ணாகுதி, தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. இதை தொடர்ந்து கடம் புறப்பாடு நடந்தது. யாகசாலையில் இருந்து மேள தாளம் முழங்க புனிதநீர் கடம் கோபுரத்திற்கும், விமானத்திற்கும், மூலவர் சன்னதிக்கும் எடுத்துச்செல்லப்பட்டன.
இதன் பிறகு காலை 9.30 மணிக்கு மேல் நெல்லையப்பர், ஸ்ரீவேணுவனநாதர், காந்திமதி அம்மாள் மற்றும் ராஜகோபுரம், விமானங்கள், பிரதான மூர்த்திகளுக்கு மகாகும்பாபிஷேகம் நடந்தது. அப்போது வானில் கருடன் வட்டமிட்டது. கூடி நின்ற பக்தர்கள் அரகர மகாதேவா என்று பக்தி கோஷம் எழுப்பினார்கள். கும்பாபிசேகத்தை தொடர்ந்து தண்ணீர் தெளிப்பான் மூலம் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.
கும்பாபிசேக விழாவில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ராஜலெட்சுமி, சேவூர் ராமச்சந்திரன், கலெக்டர் சந்தீப் நந்தூரி மற்றும் அறநிலையதுறை ஆணையர் ஜெயா, இணை ஆணையர் பரஞ்சோதி, கோவில் செயல் அலுவலர் ரோஷினி மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டார்கள்.
கும்பாபிசேகத்தை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதற்காக அதிகாலையில் இருந்தே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து குவிந்தனர். பக்தர்களுக்கு குடிநீர், சுகாதார வசதிகள் செய்யப்பட்டது.
கும்பாபிஷேகத்தையட்டி நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் பட்டாலியன் போலீசார் என 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் ஊர்க்காவல் படையினரும், தன்னார்வ தொண்டர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்கள்.