

கும்பகோணம்,
கும்பகோணம் அருகே 10-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் ஒன்றிணைந்து முதியவரை கடித்து குதறியதில் முதியவர் உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கும்பகோணம் மாவட்டம் பாலக்கரை பகுதியை சேர்ந்தவர் சின்னதுரை (70). இவர் இன்று அதிகாலை நேரத்தில் அங்குள்ள சாலையில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியில் வந்த 10-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் அவரை சூழ்ந்து அவரை சரமாரியாக கடிக்க தொடங்கின. தப்பிக்க சூழல் இல்லாததால் அவர் நிலைகுலைந்து கீழே விழுந்தார். தொடர்ந்து விடாத தெருநாய்கள் அவரை கடித்து குதறின. அவரது உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் அதிகாலை நடந்ததால் மக்கள் யாரும் அப்பகுதியில் இல்லை. விடிந்தபிறகே முதியவர் இறந்த சம்பவம் தெரியவந்தது.
தெரு நாய்கள் கடித்து முதியவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் தெருநாய்களை பிடித்து செல்ல வேண்டும் என்று பொது மக்கள் அனைவரும் சேர்ந்து நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.