

பந்தலூர்,
பந்தலூர் தாலுகா குந்தலாடி அருகே பாக்கனா, புத்தூர்வயல் பகுதிகளில் காட்டு யானைகள் தினமும் ஊருக்குள் புகுந்து வாழை, தென்னை, பாக்கு மரங்கள், பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. கடந்த மே மாதம் 26-ந் தேதி 8-ம் வகுப்பு படித்து வந்த மிஸ்ஹாப் (வயது 14) என்ற சிறுவன் புத்தூர்வயலில் இருந்து பாக்கனாவுக்கு முடி வெட்ட சென்று விட்டு வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தான். அப்போது காட்டு யானை தாக்கியதில் சிறுவன் உயிரிழந்தான். இந்த சம்பவத்தை அடுத்து காட்டு யானைகளை விரட்ட கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் கும்கி யானைகள் உதவியுடன் கண்காணித்து யானைகளை விரட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து முதுமலையில் இருந்து விஜய், கிருஷ்ணா ஆகிய 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு, பாக்கனாவில் தனியார் தேயிலை தோட்டம் பகுதியில் நிறுத்தப்பட்டு காட்டு யானைகளை விரட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் 55 வயது விஜய் என்ற கும்கி யானைக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதோடு உணவு உட்கொள்ள முடியாமல் உள்ளது. இதை அறிந்த முதுமலை புலிகள் காப்பக கால்நடை டாக்டர் ராஜேஸ்குமார், கும்கி யானைக்கு சிகிச்சை அளித்து வருகிறார்.