

சென்னை,
நாகாலாந்து மாநிலத்தின் கவர்னராக பதவி வகித்து வருபவர் இல.கணேசன். இவர், சென்னையில் உள்ள தனது வீட்டில் கடந்த 8-ந்தேதி திடீரென மயங்கி விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த இல.கணேசனை அவருடைய குடும்பத்தினர் மீட்டு சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மயங்கிய நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட இல.கணேசன், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில், தொடர்ந்து 3-வது நாளாக அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவரை டாக்டர்கள் குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.