வாக்கு சேகரிப்பின்போது மக்களுடன் அமர்ந்து உணவருந்திய எல்.முருகன்

தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி அமைந்தால் தமிழகத்திற்கு ஏற்படவிருக்கும் நன்மைகள் குறித்து எல்.முருகன் விளக்கமளித்தார்.
வாக்கு சேகரிப்பின்போது மக்களுடன் அமர்ந்து உணவருந்திய எல்.முருகன்
Published on

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் அவிநாசி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் மத்திய இணை மந்திரியும் பாஜக வேட்பாளருமான எல். முருகன் அங்குள்ள வாக்காளர்களை சந்தித்து தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், இன்று பழங்கரை பஞ்சாயத்திற்குட்பட்ட ஆயக்கவுண்டம்பாளையம் ஏ.டி. நகர் பகுதியில் வசிக்கின்ற மக்களைச் சந்தித்து எல்.முருகன் வாக்கு சேகரித்தார். அப்போது அப்பகுதி மக்களுடன் நீண்ட நேரம் கலந்துரையாடினார்.

மேலும், அவர்களுடன் உணவருந்திய எல்.முருகன் அப்பகுதி மக்களின் தேவைகளான கல்வி மற்றும் சுகாதாரம் குறித்த கோரிக்கைகளையும் கேட்டறிந்தார். மேலும், தமிழகத்தை ஆட்சி செய்து வரும் திமுக, மக்களின் உழைப்பைச் சுரண்டுவது பற்றியும், மக்கள் விரோத ஆட்சியை நடத்திக் கொண்டிருப்பது பற்றியும் பொதுமக்களிடம் விளக்கமளித்தார்.

தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி அமைந்தால் தமிழகத்திற்கும், அவிநாசி சட்டமன்றத் தொகுதிக்கும் ஏற்படவிருக்கும் நன்மைகள் குறித்தும் விளக்கமளித்தார். மத்திய இணை மந்திரி எல்.முருகனின் இந்த எளிமையான செயல் கண்டு, அப்பகுதி மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் அவரை உபசரித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com