

சென்னை,
மதுரை நாடாளுமன்ற தொகுதியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. சு. வெங்கடேசன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது;-
பெருநிறுவனங்கள் தொழிலாளர்களை எளிதில் சுரண்ட வழிசெய்வதற்கு உருவாக்கப்பட்டவைதான் நான்கு தொழிலாளர் தொகுப்புச் சட்டங்கள். மக்களவையில் இதைச் சட்டமாக்கும் பா.ஜ.க.வின் முயற்சியைக் கடுமையாக எதிர்த்திருந்தோம்.
நாடாளுமன்ற சனநாயகத்தைத் துளியும் மதிக்காத மோடி அரசு இச்சட்டங்களை ஒரு தலைபட்சமாக இயற்றியது. தற்போது இச்சட்டங்களுக்கான விதிகளை அறிவிக்கை செய்து அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளது பாஜக. அரசு. தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் நியாயமான சலுகைகளுக்கு எதிரான பா.ஜ.க. அரசின் தாக்குதலுக்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவிக்கிறேன்.
கிராமப்புற ஏழை மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தி அவர்களுக்கு வாழ்வாதாரமாக இருந்த மகாத்மா காந்தி 100 நாள் வேலை உறுதித் திட்டத்தை அழிக்கவே உருவாக்கப்பட்டதுதான் VB RAM G சட்டம். நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கிருந்த கடைசி பொருளாதார மற்றும் வாழ்வாதாரப் பாதுகாப்பையும் அழிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இச்சட்டம் ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எளிய மக்களின் உரிமையைப் பறித்து அவர்களின் உழைப்பைச் சுரண்டி கார்ப்பரேட்டுகளுக்கு வாரி வழங்கும் இச்சட்டங்களை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.