தூத்துக்குடியில் சொத்து வரி செலுத்த 30-ந்தேதி கடைசி நாள்: கணினி மையங்கள் சனிக்கிழமைகளிலும் இயங்கும்

தூத்துக்குடியில் பொதுமக்கள் சிரமமின்றி வரி செலுத்த வசதியாக, அரசு பொது விடுமுறை நாட்களைத் தவிர்த்து அனைத்து சனிக்கிழமைகளிலும் மாநகராட்சி கணினி வரி வசூல் மையங்கள் செயல்படும்.
தூத்துக்குடி மாநகராட்சி.
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பொதுமக்கள் 2026-2027-ம் நிதியாண்டின் முதலாம் அரையாண்டிற்கான சொத்து வரியைச் செலுத்த வரும் செப்டம்பர் 30-ம் தேதி கடைசி நாள் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தூத்துக்குடி மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

பொதுமக்கள் தங்கள் கட்டிடங்களுக்கான சொத்து வரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்ட வரியினங்களை எவ்வித தாமதமுமின்றி உடனடியாகச் செலுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வரிகளைப் பின்வரும் வழிகளில் எளிதாக செலுத்தலாம்:

வரி செலுத்தும் வழிமுறைகள்

மாநகராட்சியின் கணினி வரி வசூல் மையங்கள் (Computerized Collection Centers), கியூ.ஆர். கோடு (QR Code) மூலம் நேரடியாகச் செலுத்தும் வசதி, இணையதளம் வாயிலாகச் செலுத்த www.tnurbanepay.tn.gov.in என்ற முகவரியைப் பயன்படுத்தலாம்.

சனிக்கிழமைகளில் மாநகராட்சி கணினி வரி வசூல் மையங்கள் இயங்கும்

பொதுமக்கள் சிரமமின்றி வரி செலுத்துவதற்கு வசதியாக, அரசு பொது விடுமுறை நாட்களைத் தவிர்த்து அனைத்து சனிக்கிழமைகளிலும் மாநகராட்சி கணினி வரி வசூல் மையங்கள் காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்படும். எனவே பொதுமக்கள் கடைசி நேர நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வரிகளைச் செலுத்தி மாநகராட்சியின் வளர்ச்சிப் பணிகளுக்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com