'எவ்வளவு செல்வம் இருந்தாலும் தர்மம் செய்யாவிட்டால் ஒரு பயனும் இல்லை'

எவ்வளவு செல்வம் இருந்தாலும் தர்மம் செய்யவில்லை என்றால் ஒரு பயனும் இல்லை என்று ஈழத்தமிழர்களின் முக்கியத்துவம் குறித்த சர்வதேச மாநாட்டில் மகாலட்சுமி சுவாமிகள் பேசினார்.
'எவ்வளவு செல்வம் இருந்தாலும் தர்மம் செய்யாவிட்டால் ஒரு பயனும் இல்லை'
Published on

.4-வது சர்வதேச மாநாடு

தமிழ் ஈழ வரலாறு பற்றி புரிதல் மற்றும் இந்து சமுத்திர பாதுகாப்பில் ஈழத்தமிழர்களின் முக்கியத்துவம் குறித்த 4-வது சர்வதேச மாநாடு திருப்பூர் தாராபுரம் ரோடு, கோவில்வழியை அடுத்த பொல்லிகாளிபாளையம் மகாலட்சுமி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

மாநாட்டிற்கு திருப்பூர் மகாலட்சுமி கோவில் கல்கி மகான் ஸ்ரீ மகாலட்சுமி சுவாமிகள் தலைமை தாங்கினார். சிறுதுளி அமைப்பின் நிறுவனர் நிலா, மகாலட்சுமி கோவில் அன்னலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

எம்.எல்.ஏ.க்கள்

பல்லடம் தொகுதி எம்.எஸ்.எம்.ஆனந்தன் எம்.எல்.ஏ. கிணத்துக்கடவு தொகுதி தாமோதரன் எம்.எல்.ஏ., பழனி ஆதீனம் ஸ்ரீமத் போகர் சித்தர் புலிப்பாணி சுவாமிகள், இந்து மக்கள் கட்சி தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநிலத்தலைவர், ஹரி, திராவிடர் கழக மாவட்ட தலைவர் யாழ் ஆறுச்சாமி, சென்னை உயர்நீதிமன்ற வக்கீல் ஜெயந்தி, மும்பை இந்து யுவ பிரேரனா தலைவர் ஹரி ஐயர், டெல்லி தமிழர்கள் சமூக நல அறக்கட்டளை பெரியசாமி பெங்களூரு குமரேசன், திண்டுக்கல் மதிவாணன், சாமித்தோப்பு அய்யாவழி சமய தலைவர் கேப்டன் சிவா திருவடிகள் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்கள்.

தர்மம் செய்யுங்கள்

மாநாட்டில் கல்கி மகான் ஸ்ரீமகாலட்சுமி சுவாமிகள் பேசியதாவது:-

ஈழத்தமிழர்களுக்காக மட்டும் இந்த மாநாடு நடத்தப்படவில்லை. இந்தியா உள்பட உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் பாதுகாப்பிற்காகவே இந்த மாநாடு நடக்கிறது. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்று சொல்வார்கள். இயற்கையை யாரும் குறை கூற முடியாது. எவ்வளவு செல்வங்கள் இருந்தாலும் தர்மம் செய்யவில்லை என்றால் ஒரு பயனும் இல்லை. எனவே தர்மம் செய்ய வேண்டும்.

தர்மம் செய்வதை தயங்காமல் செய்தால் நம்முடைய வாழ்க்கை தழைத்தோங்கும். அநியாயங்களும், அக்கிரமங்களும் வேரூன்றி வளர்ந்துக் கொண்டிக்கிருக்கின்றன. இவைகள் என்றைக்கு வேரறுக்கப்படுகின்றதோ அன்றுதான் உலகம் நன்றாக இருக்கும். இவ்வாறு மகாலட்சுமி சுவாமிகள் பேசினார்.

தமிழீழம் அமைய வேண்டும்

சிறுதுளி அமைப்பின் நிறுவனர் நிலா பேசுகையில் "இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்காக தமிழீழம் அமைய வேண்டும். மேலும் இந்தியா தனது வெளியுறவுக் கொள்கையை மாற்றியமைக்க வேண்டும் சீனா இலங்கையில் தலைமன்னார் பகுதியில் ராணுவ தளவாடங்களை அமைத்து இந்தியாவிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி வருகிறது.

இலங்கையில் தமிழீழம் அமைந்தால் சீனா, இந்தியா மீதான அச்சுறுத்தல் குறையும். என்று தெரிவித்தார். இதில் சிறுதுளி அமைப்பின் இந்திய தேசிய ஒருங்கிணைப்பாளர் ராகுல் ரமேஷ், எஸ்.டபிள்யு.டி.டி. நிறுவனத்தின் தேசிய பொதுசெயலாளர் சப்தகிரி ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com