மின்கம்பங்களில் விளம்பர பதாகைகள் கட்டினால் சட்ட நடவடிக்கை: கல்லிடைக்குறிச்சி செயற்பொறியாளர் எச்சரிக்கை

மின்கம்பங்கள், மின்மாற்றிகளில் மின்வாரிய ஊழியர்கள், டான்பிநெட் துறை சார்ந்த பணியாளர்கள் மட்டுமே ஏற இறங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என கல்லிடைக்குறிச்சி மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
கல்லிடைக்குறிச்சி கோட்ட மின்விநியோக செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்திற்கு சொந்தமான கல்லிடைக்குறிச்சி கோட்டத்தின் சுற்று வட்டார பகுதிகளில் லட்சக்கணக்கான மின் கம்பங்களும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மின்மாற்றிகளும் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. இவற்றில் மின்வாரிய ஊழியர்கள் மற்றும் டான்பிநெட் துறை சார்ந்த பணியாளர்களுக்கு மட்டுமே ஏற இறங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவர்களைத் தவிர தனியார் நபர்கள் ஏறினால் அது தண்டனைக்குரிய குற்றமாகும்.
இந்த நிலையில் மின்கம்பங்களில் தனியார் நபர்கள் சிலர் சட்டவிரோதமாக ஏறி அவற்றில் தனியார் நிறுவன விளம்பர பதாகைகள் மற்றும் கேபிள் வயர்கள் கட்டி வரப்படுகிறது என்பதை பொதுமக்கள் தரப்பில் இருந்து அடிக்கடி புகார்கள் வருகிறது. ஆகவே கல்லிடைக்குறிச்சி கோட்டத்திற்குட்பட்ட மின்கம்பங்கள், மின்மாற்றிகள் ஆகியவற்றில் சட்டத்திற்கு புறப்பாக விளம்பர தட்டிகள், அனுமதியற்ற கேபிள் வயர்கள் எதனையும் கட்டக் கூடாது. இது மின்வாரிய பணியாளர்களுக்கு பணியின்போது சிரமத்தை ஏற்படுத்துதோடு, ஊழியர்களுக்கும் மற்றும் பொது மக்களுக்கும் விபத்து ஏற்பட வழிவகுக்கும்.
மேலும், ஏற்கெனவே கட்டப்பட்டுள்ள விளம்பர பதாகைகள் மற்றும் கேபிள் வயர்களை மின் ஊழியர்கள் துணையோடு உடனடியாக அகற்ற வேண்டும். தவறும் பட்சத்தில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






