சட்டசபையில் ஜெபமாலையுடன் வந்த அமைச்சர்: இந்துகளுக்கு மட்டும் பாரபட்சம் ஏன்? தமிழிசை கேள்வி

இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையின்படி, ஒவ்வொருவருக்கும் தங்கள் மதத்தை கடைப்பிடிக்கவும் வெளிப்படுத்தவும் முழு உரிமை உள்ளது.
தமிழிசை
Published on

சென்னை,

தமிழக முன்னாள் பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கலின்போது ஏற்பட்ட மதச்சார்பின்மை தொடர்பான விவகாரத்தில், இரட்டை அளவுகோல் இருப்பதாக விமர்சனம் செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

சட்டப்பேரவை

தமிழக சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டபோது, அதன் நகல் திருப்பதி கோவில் வெங்கடேஸ்வரப் பெருமான் திருவடியில் வைக்கப்பட்டதற்கு, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், "இந்தியா மதச்சார்பற்ற நாடு. அப்படியிருக்கையில், பட்ஜெட்டை வெங்கடேஸ்வரப் பெருமான் திருவடியில் எப்படிக் வைக்க முடியும்?" என்று கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால், இதே மதச்சார்பற்ற நாட்டில், ஜெபமாலை மற்றும் இயேசு சிலை சட்டப்பேரவைக்குள் கொண்டு வரப்பட்டபோது, அவர் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.

அதேபோல், இந்து மரபுகளுடன் தொடர்புடைய எந்த வெளிப்பாடும் மதச்சார்பின்மைக்கு எதிரானது என்று அடிக்கடி கூறிவரும் திருமாவளவன், சட்டப்பேரவைக்குள் ஜெபமாலை கொண்டு வரப்பட்டதை, "ஒவ்வொருவருக்கும் தங்கள் மதத்தை கடைப்பிடிக்கவும் வெளிப்படுத்தவும் உரிமை உள்ளது" என்று நியாயப்படுத்தினார்.

கி. வீரமணி, அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை போன்றவை நடத்தப்படுவது மதச்சார்பற்ற கொள்கைக்கு எதிரானது என்று கடந்த காலங்களில் விமர்சித்துள்ளார். ஆனால், இன்றைய இந்த நிகழ்வைப் பற்றி எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

கடந்த காலத்தில், தங்களது மத நம்பிக்கையின்படி கையில் காப்பு கட்டிக்கொள்வது, நெற்றியில் விபூதி அல்லது குங்குமம் அணிவது, இந்து மத அடையாளங்களை வெளிப்படுத்துவது போன்றவை மதவாதம் என சித்தரிக்கப்பட்டன. மாணவர்கள் கூட இத்தகைய மத அடையாளங்களுடன் பள்ளிக்கு வரக்கூடாது என்ற வாதங்களும் முன்வைக்கப்பட்டன. ஆனால், சட்டப்பேரவைக்குள் மற்றொரு மதத்தின் அடையாளம் இடம்பெற்றபோது யாரும் கேள்வி எழுப்பவில்லை.

அடிப்படை உரிமை

நான் தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன், நிதி அமைச்சர் தமது மத நம்பிக்கையின்படி ஜெபமாலை அணிவதையோ, சிலுவைக் குறி இடுவதையோ நான் விமர்சிக்கவில்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையின்படி, ஒவ்வொருவருக்கும் தங்கள் மதத்தை கடைப்பிடிக்கவும் வெளிப்படுத்தவும் முழு உரிமை உள்ளது.

ஆனால், எனது கேள்வி இதுதான்: இந்து மதத்தின் ஒவ்வொரு வெளிப்பாடும் ஏன் தொடர்ந்து மதவாதமாகவோ அல்லது மதச்சார்பின்மைக்கு எதிரானதாகவோ சித்தரிக்கப்படுகிறது, அதேசமயம் மற்ற மதங்களின் இதே போன்ற வெளிப்பாடுகள் மத சுதந்திரத்தின் விஷயங்களாகப் பாதுகாக்கப்படுகின்றன? பல இந்துக்கள் தாங்கள் இரட்டை அளவுகோலின் அடிப்படையில் நடத்தப்படுகிறோம் என்று உணர்வதற்கான காரணத்தை சுட்டிக்காட்டுவதற்காகவே இதை நான் கூறுகிறேன். தமிழக மக்கள், இந்து பெரும்பான்மையினரின் நம்பிக்கைகள், மரபுகள் மற்றும் மத உணர்வுகள் சமமாக மதிக்கப்படுகிறதா என்பதை சிந்திக்க வேண்டும்.

இந்துக்கள் தங்கள் மத நம்பிக்கைகளை வெளிப்படுத்தினால், அவர்கள் மதவாதிகள் அல்லது பிளவுவாதிகள் என்று முத்திரை குத்தப்படுகிறார்கள். ஆனால், பிற மதங்களைச் சேர்ந்தவர்கள் அதையே செய்தால், அது மதச் சுதந்திரத்தின் ஓர் இயல்பான வெளிப்பாடாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு வேறுபட்ட அளவுகோல்களை எவ்வாறு நியாயப்படுத்த முடியும்? தமிழக மக்களே, இதைப் பற்றி சிந்தியுங்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com