கோயம்பேடு சந்தையில் வரத்து குறைவால் எலுமிச்சை விலை கிடுகிடு உயர்வு

தற்போது ஒரு கிலோ எலுமிச்சை பழம் ரூ.250 வரை விற்பனை செய்யப்படுகிறது.
கோயம்பேடு சந்தையில் வரத்து குறைவால் எலுமிச்சை விலை கிடுகிடு உயர்வு
Published on

கோயம்பேடு,

கோயம்பேடு காய்கறி சந்தைக்கு எலுமிச்சை பழங்களின் வரத்து வெகுவாக குறைந்துள்ளதால், அதன் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது ஒரு கிலோ எலுமிச்சை பழம் ரூ.250 வரை விற்பனை செய்யப்படுகிறது.

விளைச்சல் குறைவு

கோயம்பேடு சந்தைக்கு ஆந்திரா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து எலுமிச்சை பழங்கள் வரத்து உள்ளது. ஆனால், தற்போது அந்த பகுதிகளில் விளைச்சல் குறைந்துள்ளதால், மராட்டிய மாநிலத்தில் இருந்து எலுமிச்சை பழங்கள் கொண்டு வரப்படுகின்றன.

மராட்டியத்தில் இருந்து ரெயில் மற்றும் லாரிகள் மூலம் எலுமிச்சை பழங்கள் சென்னை வருவதற்கு சுமார் 4 நாட்கள் ஆகிறது. இதனால், வழியிலேயே அதிகளவில் பழங்கள் அழுகி சேதமடைகின்றன.

விலை உயர்வு

கோயம்பேடு சந்தைக்கு தினமும் 150 முதல் 180 டன் வரை எலுமிச்சை பழங்கள் தேவைப்படும் நிலையில், தற்போது 20 முதல் 30 டன் மட்டுமே வரத்து உள்ளது. அதிலும் சுமார் 10 டன் மட்டுமே தரமான எலுமிச்சை பழங்கள் இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக ஒரு கிலோ எலுமிச்சை பழம் ரூ.250 வரையிலும், ஒரு பழம் ரூ.5 முதல் ரூ.10 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

இதற்கிடையே, சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் எலுமிச்சை பழங்களின் விற்பனையும் பாதிக்கப்பட்டுள்ளது. விற்பனை குறைந்ததால் சந்தையில் பழங்கள் தேங்குவதுடன், அவை அழுகி குப்பையில் கொட்டப்படும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com