எலுமிச்சை விலை கிடுகிடு உயர்வு: கிலோ ரூ.300-க்கு விற்பனை

வரத்து குறைந்ததால், எலுமிச்சை பழம் விலை கிடுகிடுவென உயர்ந்து கிலோ ரூ.300-க்கு விற்பனை ஆகிறது.
எலுமிச்சை விலை கிடுகிடு உயர்வு: கிலோ ரூ.300-க்கு விற்பனை
Published on

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் உடுமலையில், பருவநிலை, நீர்வரத்து மற்றும் நீர்இருப்புக்கு ஏற்றவாறு குறுகிய, மத்திய, நீண்ட கால பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. அதன் படி காய்கறிகள், கீரைகள், தென்னை, வாழை, கரும்பு, எலுமிச்சை, சப்போட்டா, கொய்யா போன்ற பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.

அந்த வகையில் ஒரு சில பகுதியில் எலுமிச்சை சாகுபடியும் நடைபெற்று வருகிறது. இதில், ராஜகனி என்று அழைக்கக்கூடிய எலுமிச்சையில் ஜூலை முதல் டிசம்பர் வரை அதிக மகசூல் கிடைக்கும்.

இதேபோல், ஏக்கருக்கு 160 செடிகள் வரை நடவு செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும். செடிவகை சமதள பரப்பிலும் கொடிவகை மலைப்பிரதேசங்களிலும் சாகுபடி செய்யப்படுகிறது. நடவு செய்த நாளில் இருந்து 3-ம் வருடம் அறுவடைக்கு தயாராகி விடும். அன்றாட உணவில் எலுமிச்சம் பழத்தின் பயன்பாடு உள்ளதால் அவற்றுக்கான தேவையும் ஆண்டு முழுவதும் இருந்து வருகிறது.

கிலோ ரூ.300

வைட்டமின் சி, பொட்டாசியம் உள்ளிட்ட சத்துகளை தன்னகத்தே கொண்ட எலுமிச்சை பித்தம், தலைவலி, மலச்சிக்கல், தொண்டை வலியை போக்குவதுடன் கிருமிகளை அழித்து அஜீரணப் பிரச்சினையை தீர்க்கும் வல்லமை பெற்றது. மேலும் கோடை காலத்தில் எலுமிச்சைசாறுடன் உப்பு, நாட்டு சர்க்கரை சேர்த்து தயாரிக்கும் பானகமானது உடலில் ஏற்படும் நீர் இழப்பை குறைக்கிறது. இதனால் ஏராளமான விவசாயிகள் எலுமிச்சை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால் பருவம் தவறிய மழை மற்றும் பருவநிலை மாற்றத்தால் எலுமிச்சை விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் சந்தைகளுக்கு வரத்து குறைந்து வருகிறது. இதன்காரணமாக அதன் விலை கிடுகிடுவென உயர்ந்து உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிலோ ரூ.100 முதல் ரூ.150 வரை விற்பனை ஆனது. ஆனால் தற்போது கிலோ ரூ.300-க்கு விற்பனை ஆகிறது.

வரத்து குறைந்ததால்...

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், எலுமிச்சை சாகுபடி உடும்லையை காட்டிலும் கிழக்கு மாவட்டங்களில் அதிக அளவில் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் தென்காசி மாவட்டம் புளியங்குடி, திண்டுக்கல் மாவட்டம் திருமலை, ஒட்டன்சத்திரம், பழனி ஆகிய பகுதியில் இருந்து எலுமிச்சம் பழத்தை வாங்கி வந்து மொத்தமாக விற்பனை செய்து வருகின்றோம். தற்போது கிலோ ரூ.300 வரை விற்பனையாகி வருகிறது.

வரத்து குறைவாக உள்ளதால் விலையும் கிடுகிடுவென உயர்ந்து உள்ளது. என்றனர். இதேபோல் குமரலிங்கம் பகுதியில், எலுமிச்சை பழம் கிலோ ரூ.220 வரை விற்பனை ஆகிறது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com