குழந்தைத் தொழிலாளர் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம் - அமைச்சர் முகமது பர்வேஸ் உறுதி

குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின விழிப்புணர்வுக் கூட்டம் தொழிலாளர் துறையின் சார்பாக இன்று நடைபெற்றது.
முகமது பர்வேஸ்
Published on

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ஆம் தேதி உலக அளவில் அனுசரிக்கப்பட்டு வருகிறது. குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின விழிப்புணர்வுக் கூட்டம் தொழிலாளர் துறையின் சார்பாக இன்று 12.06.2026 சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் அனுசரிக்கப்பட்டது.

விழிப்புணர்வுக் கூட்டம்

இன்று மாநில அளவிலான குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின விழிப்புணர்வுக் கூட்டம், சென்னை, செனாய் நகர், அம்மா அரங்கத்தில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜா.முகமது பர்வேஸ் தலைமையில் நடைபெற்றது.

முன்னதாக, குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான கையெழுத்து இயக்கம் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சரால் துவக்கி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான உறுதிமொழி எடுக்கப்பட்டது.

அமைச்சர் பேசும் போது, குழந்தைகளை பணிக்கு செல்வதிலிருந்து விடுவித்து, அவர்களுக்கு தரமான கல்வியை வழங்கி, அவர்களது எதிர்காலத்தை உறுதிசெய்திட வேண்டுமென்று இவ்வரசு விரும்புகிறது என தெரிவித்தார்.

கடுமையான நடவடிக்கை

மேலும், அனைத்து நிறுவனங்களிலும் திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவோர் மீது தொழிலாளர் துறை மற்றும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் மூலம் மிகக்கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குழந்தைகள் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்றும், அதற்கு இவ்வரசு அனைத்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்றும், குழந்தைகள் துணிச்சலுடன் செயல்பட வேண்டும் எனவும் “கல்வி குழந்தைகளின் பிறப்புரிமை அதை உறுதி செய்வது நமது கடமை” என்றும் தெரிவித்தார்.

மேலும், தமிழ்நாடு முதல்-அமைச்சரின் விருப்பத்தின் அடிப்படையில், குழந்தைத் தொழிலாளர் இல்லாத தமிழ்நாட்டினை உருவாக்கிட, நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயல்படுவோம் எனத் தெரிவித்தார்.

பாராட்டுச் சன்றிதழ்கள்

இந்நிகழ்ச்சியில் குழந்தைத் தொழிலாளர் முறை அகற்றுதலில் சிறப்பாக பணிபுரிந்த தொழிலாளர் துறை, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சரால் விருதுகள் மற்றும் பாராட்டுச் சன்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு கல்வி உதவித்தொகையும் வழங்கப்பட்டது.

மேலும், குழந்தைத் தொழிலாளர் முறையிலிருந்து மீட்கப்பட்டவர் மற்றும் வேலையளிப்பவர்களின் பிரதிநிதிள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், வி.கே. ராம்குமார், சென்னை, அண்ணாநகர் நகர் தொகுதி, சட்டமன்ற உறுப்பினர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அரசு செயலாளர் கொ. வீர ராகவ ராவ், தொழிலாளர் ஆணையர் ஷில்பா பிரபாகர் சதீஷ், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக இயக்குநர் செ. ஆனந்த், கூடுதல் தொழிலாளர் ஆணையர்கள், தொழிலாளர் இணை ஆணையர்கள், தொழிலாளர் துறை உயர் அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பள்ளி மாவணர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com