‘தமிழகத்தில் மீண்டும் காமராஜர் ஆட்சியை அமைப்போம்’ சு.திருநாவுக்கரசர் உறுதி

தமிழகத்தில் மீண்டும் காமராஜர் ஆட்சியை அமைப்போம் என சு.திருநாவுக்கரசர் கூறினார்.
‘தமிழகத்தில் மீண்டும் காமராஜர் ஆட்சியை அமைப்போம்’ சு.திருநாவுக்கரசர் உறுதி
Published on

சென்னை,

தமிழகத்தில் மீண்டும் காமராஜர் ஆட்சியை அமைப்போம். ஓராண்டுக்குள் 50 லட்சம் உறுப்பினர்களை காங்கிரஸ் கட்சியில் சேர்க்க இலக்கு வைத்துள்ளோம் என்று சு.திருநாவுக்கரசர் கூறினார்.

பெருந்தலைவர் காமராஜரின் 115-வது பிறந்தநாள் விழா சென்னை சத்தியமூர்த்திபவனில் நேற்று கொண்டாடப்பட்டது. விழாவுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், கே.வீரபாண்டியன், சிவ.ராஜசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் பூக்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காமராஜர் உருவப்படத்துக்கு சு.திருநாவுக்கரசர் தலைமையில் முன்னாள் தலைவர் எம்.கிருஷ்ணசாமி, முன்னாள் எம்.பி., பீட்டர் அல்போன்ஸ், பொதுச்செயலாளர் தணிக்காச்சலம், எஸ்.சி./எஸ்.டி. பிரிவு மாநில அமைப்பாளர் பி.வி.தமிழ்செல்வன், கலைப்பிரிவு மாநில தலைவர் கே.சந்திரசேகரன், சிறுபான்மை பிரிவு ஒருங்கிணைப்பாளர் கோல்டன் ரபிக், துறைமுகம் ரவிராஜ் உள்பட நிர்வாகிகளும், தொண்டர்களும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியின்போது சு.திருநாவுக்கரசர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் காமராஜர் ஆட்சி பொற்கால ஆட்சியாக இருந்தது. எனவே காமராஜர் ஆட்சியை தமிழகத்தில் மீண்டும் அமைப்போம். அதற்காக அவருடைய பிறந்தநாளான இன்று(நேற்று) காங்கிரசார் சபதம் ஏற்போம்.

தமிழக காங்கிரஸ் கட்சியின் உட்கட்டமைப்பை வலுப்படுத்தப்படும். இந்த ஆண்டு இறுதிக்குள் தமிழக காங்கிரசில் 30 லட்சம் புதிய உறுப்பினர்களையும், அடுத்த ஆண்டு காமராஜர் பிறந்தநாளுக்குள் 50 லட்சம் உறுப்பினர்களையும் சேர்க்க இலக்கு நிர்ணயித்து இருக்கிறோம்.

இவ்வாறு சு.திருநாவுக்கரசர் கூறினார்.

முன்னதாக சத்தியமூர்த்தி சிலைக்கும் சு.திருநாவுக்கரசர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com