

ராதாபுரம்:
வடக்கன்குளத்தில் டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை கொள்ளையடித்து லோடு ஆட்டோவில் அள்ளிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
டாஸ்மாக் கடை
நெல்லை மாவட்டம் வடக்கன்குளம்- ராதாபுரம் மெயின் ரோட்டில் டாஸ்மாக் கடை உள்ளது. நேற்று முன்தினம் இரவில் வழக்கம்போல் டாஸ்மாக் கடையை பூட்டி விட்டு ஊழியர்கள் சென்றனர்.
பின்னர் நள்ளிரவில் அங்கு லோடு ஆட்டோவில் வந்த மர்மநபர்கள், டாஸ்மாக் கடையின் வெளிப்புற இரும்பு கதவின் பூட்டை உடைத்து திறந்தனர். பின்னர் டாஸ்மாக் கடையில் உள்புற மரக்கதவின் பூட்டையும் உடைத்து திறந்து உள்ளே நுழைந்தனர்.
மதுபாட்டில்கள் கொள்ளை
தொடர்ந்து அங்கிருந்த மதுபாட்டில்களை கொள்ளையடித்தனர். மேலும் அட்டை பெட்டிகளில் இருந்த மதுபாட்டில்களையும் அள்ளினர். பின்னர் அவற்றை லோடு ஆட்டோவில் ஏற்றி தப்பி சென்றனர். நேற்று காலையில் டாஸ்மாக் கடைக்கு வந்த ஊழியர்கள், அங்கு பூட்டு உடைக்கப்பட்டு மதுபாட்டில்கள் கொள்ளை போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.
கண்காணிப்பு கேமராவில் பதிவு
இதுகுறித்து ராதாபுரம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜான் பிரிட்டோ மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். டாஸ்மாக் கடை அருகில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது நள்ளிரவில் 4 பேர் கொண்ட கும்பல் லோடு ஆட்டோவில் வந்து டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து மதுபாட்டில்களை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. டாஸ்மாக் கடையில் ரூ.4 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் கொள்ளை போனது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.