

சென்னை,
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 52 வயது ஆண் ஒருவருக்கு கல்லீரல் செயலிழந்த நிலையில், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உயிருக்கு போராடி வந்தார். இந்த நிலையில் சாலை விபத்தில் சிக்கி மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 39 வயது நபர் ஒருவர் மூளைச்சாவு அடைந்தார்.
அந்த நபரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது பெற்றோர் முன்வந்தனர். இதனையடுத்து மூளைச்சாவு அடைந்த நபரின் உடல் உறுப்புகள் அகற்றப்பட்டு, சுமார் 1 மணி நேரத்தில் விமானம் மூலம் சென்னை எடுத்து வரப்பட்டு உயர் ரக ஆம்புலன்ஸ் வசதியுடன் ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது.
அங்கு தயார் நிலையில் இருந்த மருத்துவர்கள், உடனடியாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டு, தமிழக சுகாதாரத்துறையின் வலுவான கட்டமைப்பை மீண்டும் ஒரு முறை உறுதி செய்துள்ளனர்.