அரசுப் பள்ளியில் வழங்கப்பட்ட காலை உணவில் பல்லி: இத்தனை அலட்சியம் ஏன்? - நயினார் நாகேந்திரன் கேள்வி

ஏழைக் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவில் இத்தனை அலட்சியம் ஏன் என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகேயுள்ள அரசுப் பள்ளியில் வழங்கப்பட்ட காலை உணவில் பல்லி கிடந்ததாகவும், அதை உட்கொண்ட நாற்பது மாணவர்களுள் நான்கு மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் வெளியாகியுள்ள செய்தி வேதனையளிக்கிறது.

தாராபுரம் மற்றும் அதன் சுற்றியுள்ள அரசு பள்ளிகளில் அரசு காலை உணவு திட்டத்தின் கீழ் இலவசமாக வழங்கப்படும் உணவுகள் அனைத்தும் சுமார் 37 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காங்கேயத்தில் இருந்து தயார் செய்து கொண்டு வருவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. பள்ளிகளில் உள்ள சத்துணவு கூடங்களிலேயே காலை உணவையும் தயாரிப்பதை விட்டுவிட்டு எதற்காக அத்தனை தூரத்திலிருந்து உணவு கொண்டு வரப்படுகிறது? சத்துணவு ஊழியர் பற்றாக்குறையின் காரணமாகவா? தொலைதூரத்தில் இருந்து கொண்டு வரப்படும் உணவு சுகாதாரமானதாகவும் சூடானதாகவும் இருக்குமா?

"சத்துணவில் புழு, பூச்சி நெளிகிறது" என சில தினங்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சி அரசுப் பள்ளி குழந்தைகள் வேதனையுடன் பகிர்ந்த நிலையில், மீண்டும் அதே போன்றதொரு சம்பவம் நடந்துள்ளது தி.மு.க. அரசின் நிர்வாகக் குளறுபடிகளையே குறிக்கிறது. ஏழைக் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவில் இத்தனை அலட்சியம் ஏன்?

எனவே, தேசியக் கல்விக் கொள்கையில் உள்ள காலை உணவு திட்டத்தின் மீது தி.மு.க. ஸ்டிக்கர் ஒட்டினால் மட்டும் போதாது அதை முறையாகவும் செயல்படுத்த வேண்டுமென தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com