எடப்பாடி பழனிசாமியுடன் எல்.கே.சுதீஷ் சந்திப்பு

மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் வேட்பாளர்களை அறிவிப்பதில் அ.தி.மு.க. மவுனம் காத்து வருகிறது.
சென்னை,
தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட மாநிலங்களவை எம்.பி.க்களாக ம.தி.மு.க.வை சேர்ந்த வைகோ, தி.மு.க.வை சேர்ந்த வில்சன், சண்முகம், முகமது அப்துல்லா, பா.ம.க.வின் அன்புமணி ராமதாஸ், அ.தி.மு.க.வின் சந்திரசேகர் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் வருகிற ஜூலை மாதம் முடிகிறது.
எனவே அதற்கான தேர்தல், வருகிற 19-ந்தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் ஒரு எம்.பி. வெற்றி பெற வேண்டுமென்றால் 34 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை. அந்த அடிப்படையில் தி.மு.க.விற்கு 4-ம், அ.தி.மு.க.விற்கு 2 இடங்களும் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
அதன்படி தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களாக வில்சன், கவிஞர் சல்மா, சிவலிங்கம் ஆகிய 3 பேர் அறிவிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள ஒரு இடம், மக்கள் நீதி மய்யத்திற்கு தி.மு.க. ஒதுக்கி உள்ளது. அதில் கமல்ஹாசன் போட்டியிடுவார் என்றும் அந்த கட்சி அறிவித்துள்ளது. எனவே இந்த முறை வைகோவிற்கு எம்.பி. பதவி கிடைக்கவில்லை.
மேலும் அ.தி.மு.க. சார்பாக மாநிலங்களவை எம்.பி. வேட்பாளர்கள் யார்? என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை. வேட்பாளர்களை அறிவிப்பதில் அ.தி.மு.க. தொடர்ந்து மவுனம் காத்து வருகிறது. அதேநேரம் தங்களுக்கு ஒரு இடம் வேண்டும் என்று கேட்டு தே.மு.தி.க.வும், பா.ம.க.வும் நெருக்கடி கொடுத்து வருகின்றன. வேட்பாளர்கள் தேர்வு குறித்து அ.தி.மு.க.பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக அந்த கட்சியினர் கூறுகின்றனர்.
இந்த நிலையில், மாநிலங்களவை இடம் வழங்க வேண்டும் என அதிமுகவிடம் தேமுதிக கேட்டு வரும் நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் சந்தித்து பேசி வருகிறார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது. மாநிலங்களவை எம்.பி சீட் வழங்குவது தொடர்பாக அதிமுக - தேமுதிக இடையே பிரச்சினை நீடித்து வரும் நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.






