"அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளை தொடர்ந்து நடத்த வேண்டும்" - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. வகுப்புகள் தொடர்ந்து நடைபெற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
"அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளை தொடர்ந்து நடத்த வேண்டும்" - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
Published on

சென்னை,

அரசு பள்ளியில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இருந்த எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. வகுப்புகள் சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் அங்கன்வாடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் பணியாற்றிய ஆசிரியர்கள் ஏற்கனவே இருந்தபடி 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை முழுமையாக ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் இது குறித்து த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

"தமிழக அரசு இந்த கல்வியாண்டு முதல் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளை ரத்து செய்ய முடிவெடுத்து இருப்பது தனியார் பள்ளிகளுக்கு சாதகமாக இருக்குமே தவிர ஏழை, ஏளிய மக்களுக்கு அல்ல. அதோடு அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைய அதிக வாய்ப்புள்ளது.

தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. வகுப்புகளை படிக்க வைத்துவிட்டு தொடர் வகுப்பிற்கு அரசுப் பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பது என்பது மிகவும் குறைவானதாகவே இருக்கும். இதனால் அரசுப் பள்ளிகளுக்குதான் பாதிப்பு ஏற்படும். இதனால் மிகவும் பாதிக்கப்படுவது ஏழை, எளிய பெற்றோர்களும் மாணவர்களுமே.

ஆகவே ஏழை, எளிய மக்களின் பொருளாதார நிலையை மனதில்கொண்டும், மாணவர்களின் தொடர் வகுப்புகள் தடைபடாமல் தொடரவும் தமிழக அரசு மீண்டும் அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. வகுப்புகள் தொடர்ந்து நடைபெற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்."

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com