செங்கல்பட்டு மாவட்டத்திற்கு 28-ந்தேதி உள்ளூர் விடுமுறை


செங்கல்பட்டு மாவட்டத்திற்கு 28-ந்தேதி உள்ளூர் விடுமுறை
x

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலில் ஆடிப்பூர விழா நாளை தொடங்குகிறது.

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர விழா 26-ந்தேதி சனிக்கிழமை தொடங்கி 28-ந்தேதி (திங்கட்கிழமை) வரை கோலாகலமாக நடைபெற உள்ளது. இதையொட்டி 26-ந்தேதி மங்கள இசையுடன் தொடங்கும் நிகழ்ச்சியில் பங்காரு அடிகளாரின் உருவ சிலைக்கும், ஆதிபராசக்தி அன்னைக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெறுகிறது.

27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.30 மணிக்கு சித்தர் பீடத்திற்கு வருகை புரியும் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தலைவர் லட்சுமி பங்காரு அடிகளாருக்கு சிறப்பான வரவேற்பை கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட பொறுப்பாளர்கள் அளிக்க உள்ளனர். தொடர்ந்து ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத்தலைவர் அன்பழகன் சித்தர் பீடம் வரும் கஞ்சி கலயங்களை வரவேற்கிறார்.

காலை 8.45 மணிக்கு கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சியை ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத்தலைவர் செந்தில்குமாராலும், தொடர்ந்து பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியை ஆதிபராசக்தி பல் மருத்துவகல்லூரி தாளாளர் டாக்டர் ரமேஷாலும் தொடங்கி வைக்கப்படுகிறது. காலை 11 மணிக்கு சுயம்பு ஆதிபராசக்தி அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யும் நிகழ்வை ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் தொடங்கி வைக்கிறார்.

28-ந்தேதி காலை 9.15 மணிக்கு நடைபெறும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை ஆதிபராசக்தி வேளாண்மை கல்லூரி தாளாளர் உமாதேவி ஜெய்கணேஷ் தொடங்கி வைக்க உள்ளார். கஞ்சி வார்த்தல் மற்றும் பாலாபிஷேக நிகழ்வும் தொடர்ந்து 28-ந்தேதியும் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலில் ஆடிப்பூர விழாவையொட்டி, வருகிற 28-ந்தேதி செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி மற்றும் கல்லூரி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இவற்றை ஈடு செய்யும் வகையில் ஆகஸ்ட் 9-ந்தேதி வேலை நாட்களாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story