

சென்னை,
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மாதம் 10-ந் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. தொடக்கத்தில் எதிர்பார்த்த அளவுக்கு பலன் கிடைக்காததால், ஊரடங்கு 24-ந் தேதி முதல் 31-ந் தேதி வரையிலும், பின்னர் 31-ந் தேதியில் இருந்து 7-ந் தேதி வரையிலும், பின்னர் 14 ஆம் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு உள்பட அரசின் நோய் தடுப்பு நடவடிக்கைகளால் கொரோனா பரவல் வேகமாக குறைந்து வருகிறது. நேற்று ஒருநாள் பாதிப்பு 10 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது. இதனால், மக்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விடத்தொடங்கியுள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தற்போது அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 21 ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது.
இந்த நிலையில், ஊரடங்கு நீட்டிப்பு குறித்து தமிழக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்துகிறார். கொரோனா பரவல் குறைந்த மாவட்டங்களில் முதற்கட்டமாக நகரப் பேருந்துகளை இயக்க அனுமதிப்பது உள்ளிட்ட தளர்வுகளை அறிவிப்பது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை சுகாதாரத் துறை, மருத்துவ நிபுணர்கள் மற்றும் அமைச்சர்களுடன் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்துகிறார்.