

ஈரோடு,
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதி சாலையில் சென்று கொண்டிருந்த கரும்பு லாரியை ஒற்றைக் காட்டு யானை வழிமறித்து, தும்பிக்கையால் கரும்புத் துண்டுகளைக் கத்தையாக அள்ளி ருசித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மற்றும் தாளவாடி மலைப்பகுதிகளில் இருந்து தினந்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகள் கரும்பு கட்டுகளை ஏற்றிக்கொண்டு திம்பம் மலைப்பாதை வழியாக சத்தியமங்கலத்தில் உள்ள சர்க்கரை ஆலைகளுக்குச் செல்வது வழக்கம். லாரிகளில் இருந்து கீழே விழும் கரும்புகளைத் தின்று பழகிய காட்டு யானைகள், கரும்பு வாசனைக்காகவே அடிக்கடி இந்த சாலையில் காத்துக்கிடக்கின்றன.
இந்நிலையில், தாளவாடி மற்றும் திம்பம் மலைப்பாதை வழியே கரும்பு கட்டுகளை லாரி ஒன்று ஏற்றி வந்தது. அப்போது, திடீரென அடர்ந்த வனப்பகுதியிலிருந்து வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை அந்த லாரியை தடுத்து நிறுத்தியது. யானையைக் கண்டதும் அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் லாரியை சாலையிலேயே நிறுத்தினார். அப்போது அந்த யானை, லாரியின் முன்பகுதிக்கு வந்து தனது தும்பிக்கையை நீட்டி, லாரியில் அடுக்கப்பட்டிருந்த கரும்புத் துண்டுகளைக் கத்தையாக அள்ளி இழுத்துப் போட்டு சுவைக்கத் தொடங்கியது.
யானை சாலையின் நடுவே நின்று கரும்புகளை ருசித்துக் கொண்டிருந்ததால், திம்பம் மலைப்பாதை மற்றும் சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் வாகனங்கள் மேற்கொண்டு செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன. இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகன ஓட்டிகள் அச்சத்துடன் தங்களது வாகனங்களுக்குள்ளேயே முடங்கினர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சத்தியமங்கலம் வனத்துறையினர், சத்தம் எழுப்பி யானையை மெதுவாக அடர் வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர். அதன் பின்னரே லாரி ஓட்டுநரும், மற்ற வாகன ஓட்டிகளும் நிம்மதிப் பெருமூச்சுடன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். யானைகளின் இந்தத் தொடர் வழிமறிப்பு போக்கைத் தடுக்க, கரும்பு லாரிகளைத் தார்ப்பாய் கொண்டு மூடி எடுத்துச் செல்லவும், யானைகள் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும் வனத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.