இன்ஸ்டாகிராம் மூலம் மலர்ந்த காதல்: கல்லூரி மாணவியை கரம்பிடித்த வாலிபர் - போலீஸ் நிலையத்தில் தஞ்சம்

இன்ஸ்டாகிராம் மூலமாக அபியாவுக்கும், விபினுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்தது.
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே மாங்கோடு ஊராட்சி கள்ளிமூடு பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ். இவருடைய மகள் அபியா (20 வயது) மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வருகிறார். திருவனந்தபுரம் காட்டாக்கடை பகுதியைச் சேர்ந்த வின்ஸ்டன் மகன் விபின் (21 வயது). இவர் லாரி டிரைவராக உள்ளார். இன்ஸ்டாகிராம் மூலமாக அபியாவுக்கும், விபினுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்தது.
இந்த நிலையில் கடந்த 27-ந் தேதி அபியா திடீரென காணாமல் போய்விட்டார். இதனை அறிந்த பெற்றோர் பதற்றமடைந்து உறவினர்கள், கல்லூரி நண்பர்களிடம் விசாரித்தனர். ஆனால் அபியாவை பற்றி எந்தவொரு தகவலும் இல்லை. இதுகுறித்து அவர்கள் அளித்த புகாரின் பேரில் அருமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து அபியாவை தேடி வந்தனர்.
இதற்கிடையே விபின், அபியாவை அழைத்துச் சென்ற விவரம் தெரியவந்தது. இதனை அறிந்த காதல் ஜோடி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தது. பிறகு இருவருடைய பெற்றோரும் வரவழைக்கப்பட்டனர்.
அங்கு தங்களுடன் வரும்படி அபியாவின் பெற்றோர், கெஞ்சி அழைத்தனர். ஆனால் அபியா, நெய்யாற்றின்கரை கோவிலில் விபினை திருமணம் செய்து கொண்டதாகவும், அவருடன் தான் செல்வேன் என உறுதியாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து காதலனுடன், அபியாவை அனுப்பி வைத்தனர்.






