

காட்டுப்புத்தூரில் காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சாவில் சந்தேகம் இருப்பதாக தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
காதல் திருமணம்
தர்மபுரி மாவட்டம் நல்லாப்பட்டியை சேர்ந்தவர் முனிராஜ். இவரது மகள் மோனிகா (வயது 20). இவரும், திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுகா ஸ்ரீராம சமுத்திரம் காவிரி நகரை சேர்ந்த சண்முகம் மகன் மணிகண்டன் (25) என்பவரும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு காதலித்து பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர். மணிகண்டன் கரூரில் உள்ள தனியார் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
தம்பதி இருவரும் திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் தவிட்டுப்பாளையம் பார்பர் காலனியில் வாடகை வீடு எடுத்து வசித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று காலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது, மோனிகா வேட்டியால் மின்விசிறியின் கொக்கியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த முசிறி துணை போலீஸ் சூப்பிரண்டு யாஸ்மின், தொட்டியம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தையன் மற்றும் காட்டுப்புத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் இதுபற்றி மோனிகாவின் தந்தை முனிராஜ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் அங்கு வந்து மகளின் உடலை பார்த்து கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.
சாவில் சந்தேகம்
மேலும் அவர் தனது மகளின் சாவில் சந்தேகம் உள்ளது. அவர் மர்மமாக இறந்துள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று காட்டுப்புத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட மோனிகா 2 மாத கர்ப்பிணியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.