

சென்னை,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நிறைவடையும் தருவாயில் இருக்கிறது. வழக்கமாக அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழை இருக்கும். ஆனால் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை 12-ந்தேதி வரை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில், தற்போது 16-ந்தேதி வரை சில இடங்களில் மழைக்கான வாய்ப்பு இருக்கிறது.
அந்த வகையில் வளிமண்டலத்தில் நிலவி வந்த மேலடுக்கு சுழற்சி, தற்போது மாலத்தீவு மற்றும் குமரிக்கடல் பகுதியை ஒட்டி காற்றழுத்த தாழ்வு நிலையாக இருப்பதால் இன்று (வெள்ளிக்கிழமை) தென் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், நாளை (சனிக்கிழமை) தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. அதற்கு அடுத்த நாள் (17-ந்தேதி) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிகழும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.