இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளராக மு.வீரபாண்டியன் தேர்வு - மு.க.ஸ்டாலின் வாழ்த்து


இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளராக மு.வீரபாண்டியன் தேர்வு - மு.க.ஸ்டாலின் வாழ்த்து
x

இயக்கத்தை இதுநாள் வரையில் சிறப்பாக வழிநடத்தி, தோழமை பாராட்டிய முத்தரசனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

சென்னை,

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் அடுத்த மாநில செயலாளராக மு. வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டதையடுத்து பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள மு.வீரபாண்டியனுக்கு வாழ்த்துகள்!. இயக்கத்தை இதுநாள் வரையில் சிறப்பாக வழிநடத்தி, தோழமை பாராட்டிய தோழர் முத்தரசனுக்கு நன்றி!. ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காகப் பாடுபடும் இடதுசாரி அரசியலில் இணைந்து பயணித்து, வெற்றி காண்போம்!

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளராக தோழர் மு.வீரபாண்டியன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தி எல்லையற்ற மகிழ்ச்சியினை எனக்குத் தருகிறது. தோழர் மு.வீரபாண்டியன் மார்க்க்சிய, லெனினிய கொள்கைகளையும், பொதுவுடமை சித்தாந்தத்தையும் நேர்த்தியாகக் கற்றுத் தேர்ந்து அவற்றுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட செங்கொடி வீரர் ஆவார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய அனைத்துப் போராட்டங்களிலும் கலந்துகொண்டு மிகச் சிறந்த போராளியாக தன் லட்சியப் பயணத்தை தொடர்ந்து வரும் தோழர் மு.வீரபாண்டியன் மிகச் சிறந்த பேச்சாளராகவும், எழுத்தாளராகவும் திகழ்ந்து வருகிறார். இதுகாரும் பொறுப்பில் இருந்த தோழர் முத்தரசனை போலவே சக தோழர்களிடமும், அனைத்துக் கட்சியினரிடமும் மிகுந்த நேசத்தோடு மதித்துப் பழகக் கூடிய பண்பாளர் தோழர் மு.வீரபாண்டியன் ஆவார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வலுவையும், மதிப்பையும் ஏற்படுத்திக் கொடுக்கக் கூடிய வகையில் அவரது பணி சிறக்கவும், அவர் எடுக்கின்ற முயற்சிகளில் வெற்றி பெறவும் மறுமலர்ச்சி தி.மு.கழகம் சார்பில் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story