மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் யார்..யார்..?

மதுராந்தகம், தாராபுரம், தட்டாஞ்சாவடி (புதுச்சேரி) சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் நா.த.க. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் யார்..யார்..?
Published on

சென்னை,

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.

இதில் த.வெ.க. சார்பில், மதுராந்தகத்தில் மரகதம் குமரவேல், தாராபுரத்தில் சத்யபாமா, அ.தி.மு.க. சார்பில் மதுராந்தகம் தொகுதியில் கணிதா சம்பத். தாராபுரம் தொகுதியில் பானுமதி ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். தி.மு.க. சார்பில் மதுராந்தகம் தொகுதியில் வக்கீல் பரந்தாமன், தாராபுரத்தில் (தனி) வக்கீல் சுகன்யா போட்டியிடுகின்றனர்.

நாம் தமிழர் கட்சி

இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளனர். இதன்படி மதுராந்தகத்தில் ஜானகிராமனும், தாராபுரத்தில் கார்த்திகாவும் போட்டியிடுகின்றனர். புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் கார்த்திக் குமாரி என்பவர் போட்டியிடுகிறார்.

இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்ட அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “சட்டமன்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வெற்றிக்கு கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும் முழு ஒத்துழைப்பை நல்குமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்று தனது எக்ஸ்வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

வேட்புமனு தாக்கல்

இரண்டு தொகுதி இடைத்தேர்தலில் 4 முனை போட்டி நிலவுவதால், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் 16-ந்தேதி முடிவடைகிறது. இதுவரையில் முக்கிய கட்சிகள் யாரும் வேட்புமனுக்களை தாக்கல் செய்யவில்லை.

சுயேச்சைகள் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை), நாளை (விநாயகர் சதுர்த்தி) விடுமுறை நாட்களாகும். எனவே வேட்புமனு தாக்கல் செய்ய செவ்வாய் மற்றும் புதன் கிழமை மட்டுமே உள்ளது. கடைசி நாளான புதன்கிழமை அன்று த.வெ.க., தி.மு.க. அ.தி.மு.க. வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com