மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் மாமல்லபுரம் வருகை - புராதன சின்னங்களை குடும்பத்துடன் கண்டு ரசித்தார்

மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் மாமல்லபுரம் வருகை தந்தார். அங்குள்ள புராதன சின்னங்களை குடும்பத்துடன் பார்வையிட்டு ரசித்தார்.
மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் மாமல்லபுரம் வருகை - புராதன சின்னங்களை குடும்பத்துடன் கண்டு ரசித்தார்
Published on

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்திற்கு மத்திய பிரதேச முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சுற்றுலா வந்தார். முன்னதாக கடற்கரை கோவில் பகுதிக்கு வந்த அவரை தமிழக அரசு சார்பில் மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் எஸ்.சக்திவேல் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பிறகு அவருக்கு சுற்றுலாத்துறை சார்பில் மாமல்லபுரம் வரலாற்று சின்னங்கள் பற்றிய குறிப்புகள் அடங்கிய சுற்றுலா தகவல் புத்தகம் வழங்கப்பட்டது.

பின்னர் போலீஸ் துறையினரையும், அதிகாரிகளையும் தன்னுடைய அருகில் அழைத்த முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் சுற்றுலா வந்துள்ள பொதுமக்களை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் மக்களோடு மக்களாக நான் சுற்றி பார்த்துவிட்டு செல்கிறேன் என்றார்.

பிறகு அவர் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமான மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்திற்குள் நடந்து சென்று பல்லவ மன்னர்களால் வடிக்கப்பட்ட கடற்கரை கோவிலின் எழில்மிகு தோற்றத்தை கலை நயத்துடன் கண்டு ரசித்தார்.

கடற்கரை கோவிலின் இரு கருவறைகளில் வீற்றிருக்கும் சிவன், விஷ்ணு சன்னதிகளை பார்வையிட்டார். அப்போது உடன் வந்த மாமல்லபுரம் சுற்றுலா வழிகாட்டி காதர்பாஷா கடற்கரை கோவில் உருவாக்கப்பட்டதன் பின்னணி, கடல் ஓரத்தில் பல நூறு ஆண்டுகளுக்கு முன் அவை எப்படி கட்டப்பட்டது. கடல் உப்பு காற்று அரிக்காத வகையில் எப்படி கோவில் பழமை மாறாமல் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பது போன்ற தகவல்களை விரிவாக விளக்கி கூறினார். அவரிடம் முதல்- மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கடற்கரை கோவிலின் அரிய தகவல்களை பற்றி ஆர்வமுடன் கேட்டு தெரிந்து கொண்டார்.

இறுதியில் கடற்கரை கோவிலின்சிற்பங்களை ரசித்து பார்த்த அவர் அங்கு நின்று தன் குடும்பத்துடன் புகைப்படம் எடுத்து கொண்டார். அப்போது சுற்றுலா வந்திருந்த மத்திய பிரதேச மாநில பயணிகள் சிலர் அவரது அருகில் செல்பி எடுக்க ஆர்வமாக சென்றனர். அவர்களின் விருப்பத்தை அறிந்த முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் அவர்களை தன் அருகில் அழைத்து புகைப்படம் எடுத்து தன் மாநில சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி படுத்தினார்.

மத்திய பிரதேச முதல்-மந்திரி வருகையையொட்டி மாமல்லபுரம் கடற்கரை கோவில், ஐந்துரதம் உள்ளிட்ட முக்கிய புராதன சின்னங்களில் மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீஸ்வரன் தலைமையில், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் உள்ளிட்ட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com