

சென்னை,
நெடுஞ்சாலை துறை டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக திமுக தொடர்ந்த வழக்கில் முகாந்திரம் இல்லை என்று லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்திருந்த நிலையில் வழக்கை சிபிஐ விசாரித்து 3 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்நிலையில் நெடுஞ்சாலைத்துறை டெண்டர் வழங்கியதில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன், முதல்வர் மீதான டெண்டர் புகாரை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம். லஞ்ச ஒழிப்புத்துறை விசரித்த நிலையில் சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது தவறு. நெடுஞ்சாலைத்துறை டெண்டர் வழங்கியதில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை. வழக்கமான டெண்டர் வேறு, எனோடிக் டெண்டர் வேறு. சாலை போடுவதற்கும் பராமரிப்பு செய்வதற்கும் சேர்த்தே டெண்டர் விடப்பட்டுள்ளது. திமுக ஆட்சியைவிட அதிமுக ஆட்சியில்தான் குறைந்த விலைக்கு டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
தற்போது டெண்டர் வழங்கப்பட்டுள்ள நிறுவனத்திற்கு, திமுக ஆட்சியில் 10-க்கும் மேற்பட்ட டெண்டர்கள் வழங்கப்பட்டுள்ளது என்றும் பொன்னையன் கூறியுள்ளார்.