மதுரை சித்திரை திருவிழா: அன்னதானம் வழங்க விதிமுறைகள் அறிவிப்பு


மதுரை சித்திரை திருவிழா: அன்னதானம் வழங்க விதிமுறைகள் அறிவிப்பு
x
தினத்தந்தி 17 April 2025 2:08 PM IST (Updated: 17 April 2025 2:14 PM IST)
t-max-icont-min-icon

நடப்பாண்டு மதுரை சித்திரை திருவிழாவில் 30 லட்சம் பக்தர்கள் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மதுரை


மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரைத் திருவிழா ஏப்.29-ல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 12 நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவில் பட்டாபிஷேகம், திருக்கல்யாணம், தேரோட்ட விழாக்களில் பக்தர்கள் அதிகளவில் கூடுவர். திருவிழாவின் மகுடமாக மே 12-ம் தேதி கள்ளழகர் ஆழ்வார்புரம் வைகை ஆற்றில் இறங்குகிறார்.

அன்றைய தினம் ஆற்றில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள். கடந்த ஆண்டு திருவிழாவின் 12 நாட்களில் மொத்தம் 25 லட்சம் பக்தர்கள் திரண்டதாகவும், நடப்பாண்டு 30 லட்சம் பக்தர்கள் திரள்வார்கள் என்றும் மாநகராட்சி கணித்துள்ளது. பக்தர்களுக்குத் தேவையான சுகாதாரம், குடிநீர், மருத்துவம், சாலை கட்டமைப்பு மற்றும் பிற அடிப்படை வசதிகளை மேற்கொள்ள மாநகராட்சி தயாராகி வருகிறது.

இந்நிலையில் மதுரை சித்திரை திருவிழாவில் அன்னதானம் வழங்குவதற்கான விதிமுறைகளை அம்மாவட்ட கலெக்டர் சங்கீதா அறிவித்துள்ளார்.

இதுதொடர்பான அறிவிப்பில், "மதுரை சித்திரை திருவிழாவுக்கு அன்னதானம், நீர் மோர் வழங்குபவர்கள் செயற்கை சாயத்தை சேர்க்கக்கூடாது. தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட பாலிதீன் பைகள், பிளாஸ்டிக் கப்புகள் ஆகியவற்றை முழுமையாக தவிர்க்க வேண்டும்

அன்னதானம் வழங்குபவர்கள் மற்றும் பெறுபவர்கள் சாப்பிட்ட பின்பு அன்னதானம் வழங்கும் இடங்களில் சேரும் கழிவுகள் முறையாக மாநகராட்சி குப்பை தொட்டியில் போட வேண்டும்.

அன்னதானம், நீர்மோர் மற்றும் குடிநீர் வழங்கும் நபர்கள் https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்பித்து உணவு பாதுகாப்பு துறையின் அனுமதி பெற்று வழங்க வேண்டும்

உணவு மற்றும் உணவுப் பொருள் தொடர்பான புகார்களுக்கு தமிழ்நாடு அரசு உணவு பாதுகாப்பு துறை (Whatsapp No.) எண்.9444042322-ல் தொடர்பு கொண்டு புகார்கள் தெரிவிக்கலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story