மதுரை சித்திரைத் திருவிழா - வெளிநாட்டினருக்கு அழைப்பு

FILEPIC
சித்திரைத் திருவிழாவில் நடப்பாண்டு 30 லட்சம் பக்தர்கள் திரள வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
மதுரை,
மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரைத் திருவிழா ஏப்.29-ல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 12 நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழா வில் பட்டாபிஷேகம், திருக்கல்யாணம், தேரோட்ட விழாக்களில் பக்தர்கள் அதிகளவில் கூடுவர். திருவிழாவின் மகுடமாக மே 12-ல் கள்ளழகர் ஆழ்வார்புரம் வைகை ஆற்றில் இறங்குகிறார். அன்றைய தினம் ஆற்றில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள். கடந்த ஆண்டு திருவிழாவின் 12 நாட்களில் மொத்தம் 25 லட்சம் பக்தர்கள் திரண்டதாகவும், நடப்பாண்டு 30 லட்சம் பக்தர்கள் திரள்வார்கள் என்றும் மாநகராட்சி கணித்துள்ளது.
பக்தர்களுக்குத் தேவையான சுகாதாரம், குடிநீர், மருத்துவம், சாலை கட்டமைப்பு மற்றும் பிற அடிப்படை வசதிகளை மேற்கொள்ள மாநகராட்சி தயாராகி வருகிறது. மாநகராட்சியில் 3,500 தூய்மைப்பணியாளர்கள் மட்டுமே இருப்பதால் அன்றாடம் 100 வார்டுகளின் தூய்மைப் பணியையே மிகுந்த சிரமப்பட்டே மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்கிறது.
இந்தநிலையில், உலக புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவை காண வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மதுரை மாவட்ட சுற்றுலா அலுவலகத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மதுரை சித்திரை திருவிழாவில் வெளிநாட்டினர் ஏராளமானோர் பங்கேற்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.






