தூத்துக்குடி சூப்பிரண்டு பரிசீலிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

ஸ்டெர்லைட் ஆலை குறித்த கூட்டத்துக்கு அனுமதிகோரிய வழக்கில் தூத்துக்குடி சூப்பிரண்டு பரிசீலிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
தூத்துக்குடி சூப்பிரண்டு பரிசீலிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
Published on

மதுரை, 

தூத்துக்குடி மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு சங்கத்தலைவர் தியாகராஜன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலை கடந்த 2018-ம் ஆண்டு மூடப்பட்டது. இதனால் ஏராளமானோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் ஸ்டெர்லைட் தொழிற்சாலை நிதியின் மூலமாக கல்வி, மருத்துவம், விவசாயம், மகளிர் சுய உதவிக்குழு எனபலர் பலன் அடைந்து வந்தனர். எனவே தொழில் நிறுவனங்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் சார்பில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும்படி கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

அந்த ஆலை பற்றிய தகவல்களை மக்களுக்கு எடுத்து கூறும்படியாக 50 ஆயிரம் பேர் கலந்துகொள்ளும் விளக்க கருத்தரங்கத்தை நடத்த அனுமதி கோரி, தூத்துக்குடி சிப்காட் போலீசாரிடம் மனு அளித்தோம். ஆனால் பாலீஸ் தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. இதை ரத்து செய்து, கருத்தரங்கிற்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி முரளிசங்கர் முன்பு விசாரணைக்கு வந்தது.

முடிவில், மனுதாரர் தரப்பில் தங்களது கோரிக்கை குறித்து புதிதாக தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுவிடம் மனு அளிக்க வேண்டும். அந்த மனுவை போலீஸ் சூப்பிரண்டு பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com