கரூர் கோவில் நிலத்தை பத்திரப்பதிவு செய்யலாம் என்ற உத்தரவுக்கு தடைவிதிக்க மதுரை ஐகோர்ட்டு மறுப்பு

நிலங்களை பத்திரப்பதிவு செய்ய ஏற்கனவே விதித்த தடையை நீக்கிய உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
மதுரை ஐகோர்ட்டு
Published on

மதுரை,

கோவில்களின் 3,084 ஏக்கர் நிலத்தை பத்திர பதிவு செய்ய அனுமதி அளித்த கலெக்டரின் உத்தரவை ரத்து செய்யும்படி மதுரை ஐகோர்ட்டில் அவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் இன்று விசாரணை நடைபெற்றது.

3,084 ஏக்கர் நிலங்கள்

திருத்தொண்டர் சபை அறக்கட்டளை அறங்காவலர் ராதாகிருஷ்ணன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், குப்புச்சிபாளையம் ரவீஸ்வரர் கோவில், வெஞ்சமாங்கூடலூர் விக்ருதீஸ்வரர் கோவில்களுக்கு கரூர் மாவட்டத்தில் 15 கிராமங்களில் 3,084 ஏக்கர் நிலங்கள் உள்பட ஏராளமான நிலங்கள் உள்ளன. இவை பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பு உடையவை.

அரசாணை

இந்த நிலங்களை ஆக்கிரமித்த தனிநபர்கள் 3,390 பேருக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டு இருந்தன. இதுதொடர்பாக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து இருந்தது.

அதன்விளைவாக மேற்கண்ட 3,084 ஏக்கர் நிலங்களையும் பத்திரப்பதிவு செய்வதற்கு தடை விதிக்கப்பட்டு சுமார் 10 ஆண்டுக்கு முன்பே அரசாணை பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் உள்ளது.

தடை நீக்கம்

இந்தநிலையில் மேற்கண்ட கோவில்களுக்கு சொந்தமான 3,084 ஏக்கர் நிலங்களை பத்திரப்பதிவு செய்ய விதிக்கப்பட்டு இருந்த தடையை நீக்கி கரூர் மாவட்ட கலெக்டர் கடந்த 9-ந்தேதி உத்தரவிட்டு இருக்கிறார். இந்த உத்தரவின் மூலம் அறநிலையத்துறையும் தடை உத்தரவுகளை நீக்குவதற்கான நட வடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளது.

உயர் அதிகாரிகளின் இந்த நடவடிக்கையால் கோவில் நிலங்கள் பெருமளவில் ஆக்கிரமிக்கப்படும் அபாயம் உள்ளது. இது தவறான முன் உதாரணமாக அமைந்துவிடும். எனவே மேற்கண்ட நிலங்களை பத்திரப்பதிவு செய்ய ஏற்கனவே விதித்த தடையை நீக்கிய கலெக்டர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

அவசர வழக்கு

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சக்திவேல் ஆகியோர் முன்பு நேற்று ஆஜரான ராதாகிருஷ்ணன் முறையிட்டார்.அதை ஏற்ற நீதிபதிகள், இந்த வழக்கு நாளை (அதாவது இன்று) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்திருந்தனர்.

உத்தரவுக்கு தடை

இந்நிலையில் இன்று நடந்த வழக்கு விசாரணையின்போது, கரூர் கோவில் நிலத்தை பத்திரப்பதிவு செய்யலாம் என்ற உத்தரவுக்கு தடைவிதிக்க ஐகோர்ட்டு மதுரைக்கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் எந்த விதியின் அடிப்படையில் தடை நீக்கப்பட்டது என இந்துசமய அறநிலையத்துறை பதில் அளிக்க வேண்டும் என்றும் ஆணையிடப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com