

மதுரை,
சமூக வலைதளங்களில் தனிநபர்களுக்கிடையே அல்லது இரு தரப்பினரிடையே நடக்கும் ஈகோ சண்டைகளையும், பரஸ்பர அவதூறுகளையும் கண்காணித்துக் கொண்டிருப்பது போலீசாரின் பணி அல்ல என்று மதுரை ஐகோர்ட்டு அமர்வு அதிருப்தி வெளியிட்டுள்ளது.
பாஜக நிர்வாகி ஒருவர், சமூக வலைதள பக்கத்தில் இஸ்லாமிய சமூகத்தினரைத் புண்படுத்தும் வகையிலும், அவதூறான முறையிலும் கருத்துகளைப் பதிவிட்டதாகக் கூறி அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். அந்த எப்.ஐ.ஆர் நடவடிக்கையை எதிர்த்தும், தன் மீதான வழக்கை முழுமையாக ரத்து செய்யக் கோரியும் அந்த பாஜக நிர்வாகி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனு நீதிபதியின் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் மற்றும் எதிர் தரப்பினரின் சமூக வலைதள செயல்பாடுகளைக் கவனித்த நீதிபதி, இரு தரப்பினரின் போக்கிற்கும் கடும் கண்டனம் தெரிவித்தார்.
விசாரணையின் போது நீதிபதி எழுப்பிய முக்கிய கேள்விகள் மற்றும் கருத்துகள்:-
சமூக வலைதளங்களிலேயே எப்போதும் ஒருவர் மாற்றி ஒருவர் மோதிக்கொண்டும், சண்டை போட்டுக் கொண்டும் இருக்கிறார்களே தவிர, இரு தரப்பினருக்கும் வேறு உருப்படியான வேலைகள் எதுவுமே இல்லையா? என்றும் பேஸ்புக், எக்ஸ் போன்ற சமூக வலைதளங்களில் தனிப்பட்ட முறையில் நடக்கும் சண்டைகளையும், விவாதங்களையும் பின்தொடர்ந்து கண்காணிப்பது போலீசாரின் முதன்மை வேலை கிடையாது எனவும் கேள்விகள் கேட்கப்பட்டது.
ஒரு தரப்பினர் தவறான அல்லது அவதூறான பதிவை வெளியிட்டால், அதற்குப் போட்டியாக மற்றொரு தரப்பினரும் சமூக வலைதளத்திலேயே அவதூறுகளைப் பரப்புவது சட்டத்திற்குப் புறம்பானது மற்றும் தவறான அணுகுமுறையாகும். நீதிமன்றம் காட்டிய சட்ட வழிமுறைசமூக வலைதளங்களில் யாரேனும் அவதூறுகளைப் பரப்பினால் அதற்கு இணையத்திலேயே சண்டையிட்டுப் பதிலடி கொடுக்கக் கூடாது என்று நீதிபதி அறிவுறுத்தினார்.
பாதிக்கப்பட்ட தரப்பினர் உடனடியாக முறையான புகார் அளிக்க வேண்டும் என்றும், அந்தப் புகாரின் அடிப்படையில் சட்டம் அனுமதிக்கும் வழிகளின் கீழ் முறையாக எப்.ஐ.ஆர் பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுப்பதே சரியான தீர்வு என்றும் நீதிபதி தெளிவுபடுத்தியுள்ளார்.