மதுரை: முழுவீச்சில் மீனாட்சி அம்மன் கோவில் வீர வசந்தராயர் மண்டபம் புதுப்பிக்கும் பணிகள்

மதுரையில் தீ விபத்தில் சேதமடைந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் வீர வசந்தராயர் மண்டப புதுப்பிக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
மதுரை: முழுவீச்சில் மீனாட்சி அம்மன் கோவில் வீர வசந்தராயர் மண்டபம் புதுப்பிக்கும் பணிகள்
Published on

மதுரை,

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் வீர வசந்தராயர் மண்டபம் கடந்த 2018ம் ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தில் சேதமடைந்தது. இந்நிலையில், அதனை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இதுபற்றி இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், மதுரை, அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் கடந்த 02.02.2018 அன்று தீ விபத்து காரணமாக வீர வசந்தராயர் மண்டபம் சேதமடைந்தது.

அதனை புதுப்பிக்கும் பணிகள் பல ஆண்டுகளாக தாமதமாக நடைபெற்று வந்தன.

இப்பணிகளை துரிதப்படுத்துவது தொடர்பாக கடந்த 18.06.2021 அன்று இந்து சமய அறநிலையத்துறை, அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். இவ்வாய்வில் விரைவில் கட்டடப்பணிகளை முடிக்க வேண்டும் என சம்மந்தப்பட்ட அறநிலையத்துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

அதன் பேரில் நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம், பட்டினம் கிராமத்தில் உள்ள கல்குவாரியில் கற்கள் வெட்டி எடுக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு, முதற்கட்டமாக 16.07.2021 அன்று இரண்டு கனரக வாகனங்களில் கற்கள் கொண்டு வந்து மதுரை, அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான கூடல் செங்குளம் பண்ணையில் இறக்கி வைக்கப்பட்டு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மேலும், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன் இப்பணிகளை துரிதப்படுத்துவது தொடர்பாக மேற்பார்வையிட்டு வருகிறார் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com