

செங்கல்பட்டு,
செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பெய்து வரும் தொடர்மழை காரணமாக, அந்த மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி, அதன் முழு கொள்ளளவான 23.3 அடியை எட்டியது. நேற்று வினாடிக்கு 2 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்றைய தினம் 3 மடங்காக உயர்ந்து 6 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக மதுராந்தகம் ஏரியில் இருந்து இன்று வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் மழை தொடர்ந்து பெய்து வந்தால், மதுராந்தகம் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 6 ஆயிரத்தில் இருந்து 8 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.