சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதியை நிலைநாட்டுக: திருமாவளவன் வலியுறுத்தல்

சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதியை நிலைநாட்டுக: திருமாவளவன் வலியுறுத்தல்
Published on

சென்னை,

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் நியமனத்தில் தொடர்ந்து பாஜக, ஆர் எஸ் எஸ் ஆதரவு வழக்கறிஞர்கள் மட்டுமே இடம்பெறுவது நீதி நிர்வாக அமைப்பு சனாதன மயம் ஆகி வருவதைக் காட்டுகிறது. இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

தற்போது நீதிபதி நியமனத்துக்காக சென்னை ஐகோர்ட்டு கொலிஜியத்தின் பரிசீலனையில் உள்ள பட்டியலில் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் கூட இடம் பெறவில்லை என்று தெரியவந்துள்ளது. இது மிகப்பெரிய அநீதியாகும். தற்போது சென்னை ஐகோர்ட்டில் உள்ள நீதிபதிகளில் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்களே அதிகமாக உள்ளனர். அதிலும் குறிப்பாக பாஜக ஆதரவாளர்கள் மட்டுமே தொடர்ந்து நீதிபதிகளாக நியமிக்கப்படுகின்றனர்.

தற்போது சென்னை ஐகோர்ட்டு கொலிஜியத்தின் பரிசீலனையில் உள்ளவர்களில் ஏழு பேர் மத்திய அரசின் வழக்கறிஞர்களாகவும், அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை வழக்கறிஞர்களாகவும், பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் நெருங்கிய தொடர்புடையவர்களாகவும் உள்ளவர்கள் எனத் தெரியவந்துள்ளது. தகுதி அடிப்படையில் நீதிபதிகள் நியமிக்கப்படுவதாக சொல்லப்பட்டாலும் உண்மையில் அது சாதி மத அரசியல் சார்பு அடிப்படையிலேயே இருக்கிறது.

சமூக நீதிக்கு எதிரான இந்தப் போக்குக் கண்டிக்கத்தக்கதாகும். தற்போது மேற்கொள்ளப்படவிருக்கும் நீதிபதிகள் நியமனத்தில் ஆதி திராவிடர் மற்றும் இதுவரை நீதிபதி நியமனங்களில் இடம்பெறாத மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சார்ந்தவர்களை இடம்பெறச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். சமூக நீதிக்கு எதிராகத் தொடர்ந்து நீதிபதிகள் நியமனம் செய்வதை கொலிஜியம் கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com