

தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி உட்கோட்ட டி.எஸ்.பி. ஜெகநாதன் மேற்பார்வையில், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவில்பட்டி மந்திதோப்பு- பாண்டவர்மங்கலம் ரோடு ஜங்ஷன் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு சந்தேகப்படும்படி வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி போலீசார் சோதனை செய்ததில், அவர் கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த திருப்பதி (வயது 50) என்பதும் அவர் சட்டவிரோத விற்பனைக்காக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வைத்திருந்ததும் தெரியவந்தது.
உடனடியாக மேற்சொன்ன போலீசார் திருப்பதி என்பவரை கைது செய்து அவரிடமிருந்த 139 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.