

திருநெல்வேலி,
திருநெல்வேலி மாவட்டத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வெளிச்சத்துக்கு வந்த பாலியல் அத்துமீறல் தொடர்பாக போக்சோ வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் காவல் நிலைய எல்லையில் உள்ள வி.கே.புரம், செயின்ட் அசிசி பொதுப்பள்ளியில் நேற்று சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போது, 12 வயது சிறுமி தனக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் தொல்லை ஏற்பட்டதாக தெரிவித்தார்.
இதையடுத்து, சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில், அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விசாரணையில், சிறுமிக்கு நீச்சல் கற்றுத் தருவதாகக் கூறி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தெற்கு அகஸ்தியர்புரத்தைச் சேர்ந்த ஜார்ஜ் (வயது 50) என்பவர் மீது போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து, அம்பாசமுத்திரம் காவல் நிலைய போலீசார் ஜார்ஜ் என்பவரை கைது செய்தனர். மேலும், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது.