கோயம்பேடு பஸ் நிலையத்தில் பயணிகளிடம் 'லேப்டாப்' திருடிய பலே திருடன் கைது

கோயம்பேடு பஸ் நிலையத்தில் பயணிகளிடம் ‘லேப்டாப’ திருடிய பலே திருடனை போலீசார் கைது செய்தனர்.
கோயம்பேடு பஸ் நிலையத்தில் பயணிகளிடம் 'லேப்டாப்' திருடிய பலே திருடன் கைது
Published on

லேப்டாப் திருட்டு

சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் பயணிகளின் லேப்டாப்கள் அடிக்கடி திருட்டு போவதாக கோயம்பேடு போலீசாருக்கு புகார்கள் வந்தன. இது குறித்து கோயம்பேடு உதவி கமிஷனர் ரமேஷ் பாபு தலைமையில் போலீசார், அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

மேலும் பஸ்சில் பயணம் செய்தவர்களில் பாதி வழியிலேயே இறங்கியவர்கள் யார்? என்பது குறித்த விவரங்களையும் சேகரித்தனர். அதில் தனியார் பஸ்சில் கிடைத்த கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த உதிரபிரபு (வயது 36), என்பவரை கைது செய்து விசாரித்தனர். அதில் அவர், பயணிகள் போல் பஸ்சில் வந்து பயணிகளின் லேப்டாப்பை திருடியதை ஒப்புக்கொண்டார்.

பயணிகள் போல்...

உதிரபிரபு தற்போது சென்னையில் வசித்து வருகிறார். இவர், இரவு நேரங்களில் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து திருச்சி, மதுரை, தூத்துக்குடி, பெங்களூரு உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பஸ்களில் டிக்கெட் எடுத்துக்கொண்டு பயணி போல் செல்வார். அப்போது பஸ்சில் பயணிப்பவர்களில் யார் லேப்டாப் வைத்து உள்ளார்கள்? என நோட்டமிடுவார். பின்னர் அவர்கள் அயர்ந்து தூங்கும்போது அவர்களின் லேப்டாப்பை திருடிவிட்டு பாதி வழியில் இறங்கி விடுவார். பின்னர் அங்கிருந்து சென்னை வரும் பஸ்சில் அதே போல் ஏறி பயணிகளின் லேப்டாப்களை திருடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

குறைந்த விலைக்கு விற்பனை

இவ்வாறு திருடிய லேப்டாப்களை, சர்வீஸ் கடைகளில் குறைந்த விலைக்கு விற்று அதில் கிடைக்கும் பணத்தில் குடித்துவிட்டு உல்லாசமாக இருந்து வந்துள்ளார். மேலும் கோயம்பேடு பஸ் நிலையத்தில் பஸ் கிடைக்காமல் தூங்குபவர்களிடம் லேப்டாப் திருடியது தெரிந்தது.

அவரிடம் இருந்து 20 லேப்டாப்புகள், 5 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். 2021-ம் ஆண்டு முதல் கோயம்பேடு பஸ் நிலையத்திலும், பஸ்களிலும் இதுபோல் பயணிகளிடம் லேப்டாப்புகளை திருடி வந்ததும் போலீஸ் விசாரணையில் தரியவந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com