

திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் விமானங்களில் செல்பவர்களை குடியுரிமை பிரிவு அதிகாரிகள் சோதனை செய்வது வழக்கம். நேற்று திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு இண்டிகோ விமானம் புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டு இருந்தனர். அப்போது மதுரை வெள்ளையனூர் பகுதியை சேர்ந்த கண்ணன் (வயது 53) என்பவர் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவர் மகன் குமார் என்று போலியான பெயரில் பாஸ்போர்ட் பெற்று சிங்கப்பூர் செல்ல முயன்றது தெரியவந்தது. இதையடுத்து, அவரை விமான நிலைய போலீசாரிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர். அவர்கள் கண்ணன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.