வயதான தாயை கட்டிலுடன் சாலையின் நடுவே அமர வைத்த நபர்; தேனியில் பரபரப்பு

போலீசார் விரைந்து வந்து சாலையின் நடுவே கட்டிலில் அமர்ந்திருந்த மூதாட்டியை பத்திரமாக மீட்டனர்
வயதான தாயை கட்டிலுடன் சாலையின் நடுவே அமர வைத்த நபர்; தேனியில் பரபரப்பு
Published on

தேனி,

ஆண்டிப்பட்டி அருகே உள்ள கோவில்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மனைவி முத்துப்பிள்ளை. வயது முதிர்வால் வேலைக்கு செல்ல முடியாததால் முத்துப்பிள்ளை தேனி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி வளாகத்தில் யாசகம் பெற்று வந்தார். இவரது மகன் ராஜேந்திரனுக்கு மன நலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.இந்த நிலையில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி வளாகத்தில் முத்துப்பிள்ளை கட்டிலில் அமர்ந்திருந்தார். அப்போது ராஜேந்திரன் அங்கு வந்தார். அவர் முத்துப்பிள்ளையை கட்டிலோடு இழுத்து வந்து, ஆஸ்பத்திரி முன்பு தேனி-மதுரை சாலையின் நடுவே விட்டார். இதனைக்கண்ட வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து க.விலக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். சாலையின் நடுவே கட்டிலில் அமர்ந்திருந்த மூதாட்டியை பத்திரமாக மீட்டு சாலையோரம் இருந்த மரத்தடியில் அமர வைத்தனர். அப்போது ராஜேந்திரன் திடீரென சாலையில் படுத்தார். அவரையும் இழுத்து வந்து சாலையோரம் அமர வைத்தனர். இந்த நிலையில் ராஜேந்திரன் தனது தாயை அடிக்கடி துன்புறுத்துவதாக அப்பகுதி மக்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மூதாட்டியை முதியோர் காப்பகத்திற்கும், ராஜேந்திரனை மனநல காப்பகத்திற்கும் அனுப்பி வைக்க போலீசார் முடிவு செய்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com