

தூத்துக்குடி மாவட்டம், எப்போதும்வென்றான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வைத்து முன்விரோதம் காரணமாக பெண்ணிடம் தகராறு செய்து தவறாக பேசி கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் எப்போதும்வென்றான் பகுதியைச் சேர்ந்த மாரிசெல்வம் (வயது 44) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
மேற்சொன்ன வழக்கை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்த வழக்கின் விசாரணை ஓட்டப்பிடாரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாக்கியராஜ் நேற்று மாரிசெல்வத்தை குற்றவாளி என உறுதி செய்து அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
இந்த வழக்கின் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தந்த விளாத்திகுளம் உட்கோட்ட டி.எஸ்.பி. சுந்தரபாண்டியன், இந்த வழக்கினை திறம்பட புலனாய்வு செய்த அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன், நீதிமன்றத்தில் சிறப்பாக வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் முருகேசன், வழக்கின் விசாரணைக்கு உதவியாக இருந்த ஏட்டு கண்ணன் ஆகியோரை தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. மதன் பாராட்டினார்.