ரூ.5 லட்சம் பணத்தை திரும்ப கேட்டதால் ஆத்திரம்.. அக்கா மகளுக்கு ஆபாச புகைப்படம் அனுப்பிய டாக்டர் கைது

பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
ரூ.5 லட்சம் பணத்தை திரும்ப கேட்டதால் ஆத்திரம்.. அக்கா மகளுக்கு ஆபாச புகைப்படம் அனுப்பிய டாக்டர் கைது
Published on

சென்னை,

மருத்துவபடிப்பு செலவுக்காக கொடுத்த ரூ.5 லட்சம் பணத்தை திரும்ப கேட்டதால் அக்காள் மகளுக்கு ஆபாச புகைப்படங்களை அனுப்பிய அரசு டாக்டர் கைது செய்யப்பட்டார்.

உதவிக்கு கிடைத்த அவலம்

சென்னை தேனாம்பேட்டை பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்திருந்தார்.

அதில் அவர் கூறியிருந்ததாவது:-

எனது சகோதரர் பெயர் செல்வவேல். அவர் மருத்துவ படிப்பு செலவுக்காக ரூ.5 லட்சம் செலவு செய்தேன். அவர் படித்து டாக்டரானவுடன் எனது மகளை திருமணம் செய்து கொள்கிறேன் என்று அளித்த வாக்குறுதியின் அடிப்படையில்தான் இந்த கடன் உதவியை செய்தேன். ஆனால் அவர் டாக்டர் படிப்பை முடித்தவுடன், இந்த வாக்குறுதியை மீறி விட்டார். இதனால் நான் கொடுத்த ரூ.5 லட்சம் பணத்தை திரும்ப தருமாறு தொடர்ந்து வலியுறுத்தியும் அவர் தராமல் தொடர்ந்து ஏமாற்றி வந்தார்.

ரூ.5 லட்சம் பணம்

இந்த நிலையில் அவர், எனது மகளின் செல்போன் எண்ணுக்கு ஆபாசமாக புகைப்படம், அவதூறான குறுஞ்செய்திகள் அனுப்பினார். மேலும் 'வாட்ஸ் அப் வீடியோ கால்' மூலம் என்னிடமும், எனது மகளிடமும் தகாத முறையில் பேசி கொலை மிரட்டல் விடுத்தார். மேலும் எனது மகளின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விடுவேன் என்றும் மிரட்டினார். எனவே அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து, நான் கொடுத்த ரூ.5 லட்சம் பணத்தை மீட்டு தர வேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது.

தஞ்சையில் கைது

இந்த புகார் மனு அடிப்படையில் செல்வவேல் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் செல்வவேல் (வயது 40) சமீபத்தில்தான் அரசு டாக்டராக பணி நியமன ஆணை பெற்று தஞ்சை மாவட்டம் நாஞ்சிக்கோட்டை சாலையில் அமைந்துள்ள மருங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வருவது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவரை தேனாம்பேட்டை தனிப்படை போலீசார் தஞ்சை சென்று கைது செய்தனர். பின்னர் அவர், சென்னை அழைத்து வரப்பட்டார். விசாரணையில் இவர் மீது தஞ்சை போலீசில் ஒரு குற்ற வழக்கு இருப்பதும் தெரியவந்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com