

நெல்லை,
கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே கூட்டுறவு வங்கியில் கடந்த 17-ந்தேதி முகமூடி அணிந்த மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கி முனையில் வங்கி ஊழியர்களை மிரட்டி பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
இது குறித்து மங்களூரு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கேரள மாநிலம் வழியாக தமிழகத்தின் நெல்லை மாவட்டத்திற்குள் நுழைந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதன்படி மங்களூரு காவல்துறை ஆய்வாளர் ராஜேந்திர பிரசாத் தலைமையிலான தனிப்படை போலீசார், இன்று நெல்லை மாவட்டம் அம்பையில் முருகாண்டி, ஜோஸ்வா ஆகிய 2 நபர்களை கைது செய்தனர். தொடர்ந்து அவர்கள் இருவரையும் அம்பை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, மருத்துவ பரிசோதனைக்காக அம்பை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.