

கிருஷ்ணகிரி,
தமிழகத்தில் தற்போது மாம்பழம் சீசன் நிலவி வருகிறது. தமிழகத்தை தாண்டி ஆந்திரா, கர்நாடகாவிலும் அதிக அளவில் மாம்பழ விளைச்சல் இருக்கிறது. என்றாலும் சேலம், கிருஷ்ணகிரி உள்பட தமிழக மாவட்டங்களில் விளையும் மாம்பழங்கள் மக்கள் மத்தியில் பிரபலம்.
ஆனால், விளைச்சல் அதிகமாக இருந்தபோதும் விலை குறைவாக இருப்பதால், மாம்பழங்களை சந்தைக்கு கொண்டு செல்ல முடியாமல் கிருஷ்ணகிரி விவசாயிகள் தவித்து வருகின்றனர். வேறு வழியில்லாமல், மாம்பழங்களை சாலையில் கொட்டிச் செல்லும் அவல நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
மாம்பழ சீசன் காலத்தில், மாம்பழ கூழ் தயாரிக்கும் ஆலைகளை ஏற்படுத்தி, பதப்படுத்தப்பட்ட பொருள்களாக மாற்றி உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், அரசு செவிசாய்க்காததால் இந்த ஆண்டு மாம்பழங்கள் வீணாக சாலையோரம் கொட்டப்பட்டு வருகிறது. புதிய அரசாவது நடவடிக்கை மேற்கொள்ள விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.