

சென்னை,
சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தின் தலைமை பொறுப்பை மரியானா எல்.நெய்ஷுலர் ஏற்றுக்கொண்டுள்ளார். இதுகுறித்து துணைத் தூதர் மரியானா எல்.நெய்ஷுலர் பேசும்போது, "நமது இருதரப்பு உறவின் இந்த முக்கியமான தருணத்தில் தென்னிந்தியாவில் அமெரிக்காவைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் நான் பெருமைப்படுகிறேன்.
அதிபர் டிரம்ப், வெளியுறவுத்துறை செயலாளர் ரூபியோ மற்றும் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கோர் ஆகி யோரின் தலைமையின் கீழ், அமெரிக்கர்கள் மற்றும் இந்தியர்களுக்கு சிறந்த பலன்களை வழங்கும் கூட்டு செயல்பாடுகளை வலுப்படுத்துவதில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம்.
வர்த்தக உறவுகளை விரிவுபடுத்துவதற்கும், அமெரிக்க வணிகங்களை ஆதரிப்பதற்கும், நமது உறவை மிகவும் வலுவாக்கும் மக்களுக்கு இடையேயான தொடர்புகளை வளர்ப்பதற்கும் நான் செயலாற்றுவேன்” என்றார். சென்னைக்கு வருவதற்கு முன்னர் தாஷ்கண்டில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் அரசியல் மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான ஆலோசகராக துணைத் தூதர் நெய்ஷுலர் பணியாற்றினார்.
ஜெருசலேம் மற்றும் அம்மான் தூதரகங்களில் பொருளாதார துணை ஆலோசகராகவும், வாஷிங்டன் டி.சி., துபாய், ஸ்கோபியே மற்றும் மாஸ்கோவிலும் அவர் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.