மாமியார் வீட்டுக்கு சென்ற இடத்தில் மலர்ந்த காதல்: மனைவியின் தங்கையை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர்

மாமியார் வீட்டுக்கு சென்றபோது மனைவியின் தங்கையை காதலித்து கர்ப்பமாக்கி திருமணம் செய்து ஒரே வீட்டில் வாலிபர் குடும்பம் நடத்தினார்.
மாமியார் வீட்டுக்கு சென்ற இடத்தில் மலர்ந்த காதல்
Published on

வேலூர்,

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 22 வயது வாலிபர் தொழிலாளியாக உள்ளார். இவர் காட்பாடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 20 வயது இளம்பெண்ணை காதலித்தார். அவரது காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் அவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பெண்ணை அழைத்துச் சென்று திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து அந்தப் பெண் கர்ப்பமான பின்னர் குடும்பத்தினர் அவரை ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து பிரசவத்துக்காக அந்தப் பெண் தனது தாயார் வீட்டிற்கு சென்றிருந்தார். அங்கு அவருக்கு குழந்தை பிறந்தது.

இந்தநிலையில் கணவர் மனைவியை பார்க்க மாமியார் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது மனைவியின் 17 வயதுடைய தங்கையை அவர் காதலித்து உள்ளார். அந்த சிறுமியும் அவரை காதலித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு அவர் அந்த சிறுமிக்கு தாலியைக் கட்டி உள்ளார். அந்த சிறுமியும் கர்ப்பமானார். இதுகுறித்து சிறுமியின் குடும்பத்துக்கும், அக்காவுக்கும் தெரியவந்தது. இதனால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

தொடர்ந்து அந்த நபர் தனது மனைவியின் சம்மதத்துடன் சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று குடும்பம் நடத்தி உள்ளார்.

அப்போது அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சிறுமி கர்ப்பமாக இருப்பதை அறிந்ததும் அவர்கள் குழந்தைகள் நல அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் இதுகுறித்து விசாரணை நடத்தினர். மேலும் காட்பாடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com