

சென்னை,
மதவெறி கலவரங்களை தூண்டுபவர்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுத்திடுக என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல் இது தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருபதாவது:-
திருவொற்றியூர், தாங்கல் பீர் பயில்வான் பகுதியில் வசிக்கும் அலி என்பவர், மாநகராட்சியில் உரிமம் பெற்று இறைச்சி கடை நடத்தி வருகிறார். பாரத் முன்னணி என்ற அமைப்பை சேர்ந்த சிவாஜியும், மற்றும் சிலரும் 16.07.2026 அன்று இரவு 11.30 மணிக்கு அலியின் வீட்டில் அத்துமீறி நுழைந்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். மாடுகளை வெட்டக் கூடாது என அச்சுறுத்தலும் செய்துள்ளனர்.
இவர்களுடன் காவல் உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட சில காவலர்களும் உடன் சென்றுள்ளனர். அவர்களது முன்னிலையில்தான் அச்சுறுத்தலும், கொலை மிரட்டலும், மதவெறி நடவடிக்கைகளும் நடந்துள்ளன. இது மதவெறி கலவரங்களை தூண்டுவதற்கான திட்டமிட்ட முயற்சியே என்பதைச் சுட்டிக்காட்டுகிறோம். இது மிகுந்த கண்டனத்துக்குரியது.
சிவாஜி உள்ளிட்ட இதே நபர்கள் சில மாதங்களுக்கு முன் கார்கில் நகர்ப் பகுதியில் மதவெறி கலவரத்தை தூண்டக்கூடிய நடவடிக்கைகளில் ஈடுபட்டுப் பணம் பறித்ததாகவும் தகவல் உள்ளது. இதன் மூலம் மதக்கலவரத்தை தூண்டிப்பணம் சம்பாதிக்கும் நடவடிக்கையில் இவர்கள் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள் என்று தெரியவருகிறது.
இது குறித்து பாதிக்கப்பட்ட அலி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவொற்றியூர் தெற்கு பகுதிக்குழுவும் புகார் அளித்துள்ளனர். சங் பரிவார அமைப்புகள் நாடு முழுவதும் செய்யும் கலவர நடவடிக்கைகளை தமிழகத்தின் தலைநகரான சென்னையிலும் தொடங்கியுள்ளனர். ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்டக்குழுவும், அப்பகுதியின் பல்வேறு அமைப்புகள் இணைந்து உருவாக்கியுள்ள நீதிக்கான போராட்டக்குழுவும் மத மோதலை தூண்டிவிடும் குற்றவாளிகள் மீதும், அதற்கு துணைபோன காவலர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறுதியுடன் குரல் கொடுத்து வருகின்றனர்.
சட்டம் ஒழுங்கை பாதுகாத்து, அமைதியையும் மக்கள் ஒற்றுமையையும் நிலைநாட்டும் பொறுப்பும் கடமையும் உள்ள காவல்துறை, ஒருதலைப்பட்சமாக குற்றவாளிகளின் பக்கம் நிற்பது சமூகத்தில் ஆபத்தான பல விளைவுகளை ஏற்படுத்தும்.
முதல் தகவல் அறிக்கையில், குற்றவாளிகள் மீது பிரச்சினையின் தீவிரத்திற்கு ஏற்ப பி.என்.எஸ் 308(4) போன்ற சட்டப்பிரிவுகள் பதிவு செய்யப்படவில்லை. உள்ளூர் காவல்துறை மூலம் நீதி கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை. எனவே, காவல்துறையின் உயர் அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு, குற்றவாளிகள் மீதும், அவர்களுக்குத் துணையாகச் செயல்பட்ட காவலர்கள் மீதும் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.