கூட்டுறவு வங்கிக்குள் புகுந்த முகமூடி கொள்ளையர்கள்.. அடுத்து நடந்த சம்பவம்..!

முகமூடி அணிந்த 2 மர்மநபர்கள் கூட்டுறவு வங்கியின் இரும்பு கதவுகளை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர்.
கூட்டுறவு வங்கிக்குள் புகுந்த முகமூடி கொள்ளையர்கள்.. அடுத்து நடந்த சம்பவம்..!
Published on

ஓட்டப்பிடாரம்,

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே எப்போதும்வென்றானை அடுத்த வெள்ளையம்மாள்புரத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது. நேற்று காலையில் வழக்கம்போல் கூட்டுறவு வங்கி செயலாளர் செல்வகுமார் மற்றும் ஊழியர்கள் வங்கிக்கு சென்றனர். அப்போது வங்கியின் கதவுகள் உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

கூட்டுறவு வங்கி

இதுகுறித்து எப்போதும்வென்றான் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார், கூட்டுறவு வங்கிக்கு விரைந்து சென்றனர். அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை பார்வையிட்டனர். இதில், நேற்று முன்தினம் இரவு 10.30 மணி அளவில் முகமூடி அணிந்த 2 மர்மநபர்கள் நைசாக கூட்டுறவு வங்கியின் இரும்பு கதவுகளை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். பின்னர் அவர்கள், வங்கியின் மரக்கதவுகளையும் உடைத்து, லாக்கர் இருந்த அறைக்குள் புகுந்தனர்.

கம்பி வெட்டும் எந்திரம்

தொடர்ந்து வங்கியின் இரும்பு லாக்கரை உடைக்க முயன்றனர். ஆனாலும் முடியவில்லை. கம்பி வெட்டும் எந்திரம் மூலமாக லாக்கரை வெட்ட முயன்றனர். லாக்கர் உறுதியாக இருந்ததால் அதனை வெட்ட முடியவில்லை. அதன்பிறகு லாக்கரின் அருகில் சுவரில் துளையிட முயன்றனர். அந்த சுவர் முழுவதும் கான்கிரீட்டாக இருந்ததால் அந்த முயற்சியும் தோல்வியில் முடிந்தது.

கொள்ளை முயற்சி

நேற்று அதிகாலை 1 மணி வரையிலும் போராடிய கொள்ளையர்கள், பின்னர் கொள்ளை முயற்சியை கைவிட்டு தப்பி சென்றனர். இதனால் வங்கி லாக்கரில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான நகை, பணம் தப்பியது.

கொள்ளை முயற்சி நடந்த கூட்டுறவு வங்கியில் பதிவான தடயங்களை கைரேகை நிபுணர்கள் பதிவு செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, வங்கியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட முகமூடி கொள்ளையர் களை வலைவீசி தேடி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com